“மாமேதை” அண்ணாமலை.. தேர்தல் நெருங்கும்போது யாராவது இந்த வேலையை செய்வாங்களா? திருநாவுக்கரசர் சுளீர்!
புதுக்கோட்டை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று திமுக மகளிர் உரிமை மாநாடு நடத்தியுள்ள திமுகவிற்கு மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு எந்த வித தகுதியும் இல்லை. காங்கிரஸ், கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக இருக்கிறது." என்றார்.

இந்நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
திருநாவுக்கரசர் பேசுகையில், "அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளிலே பெரிய கட்சி திமுகதான். திமுகவை வளர்ப்பதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளது என்ற கருத்து அர்த்தம் இல்லாதது. அண்ணாமலை தனது தோழமைக் கட்சியை விமர்சித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரால் கூட்டணியில் உள்ள கட்சியையே வைத்துக் கொள்ள முடியவில்லை.
கூட்டணி கட்சியையே திட்டி தோழமை கட்சியையே கூட்டணியில் இருந்து விரட்டிவிட்ட மாமேதை அண்ணாமலை. தேர்தலுக்கு 4 மாதம் இருக்கும்போது தோழமை கட்சியை யாராவது விரட்டிவிடுவார்களா? அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக நிர்வாகிகளே என்னிடம் தனியாக புலம்புகின்றனர் என கூறினார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி நடத்திய கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது, கிளை அமைப்பை பலப்படுத்துவது, தோழமை கட்சிகள் உடனான நட்புறவு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார். தேர்தல் வருவதால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என ஆலோசனை வழங்கினார். சீட் குறித்தும் ஏதும் பேசவில்லை.
மாநிலத் தலைவர் மாற்றம் குறித்தும் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஏதும் பேசவில்லை. தேசியக் கட்சிகளில் மாநில தலைவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்தது புதிய தலைவரை நியமிப்பது வழக்கம்தான். இங்கு நிரந்தர தலைவர்களாக யாரும் இருக்க முடியாது.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நிறைய பேர் விரும்புகிறார்கள். தலைவர் என்பது கௌரவமான பதவி, செயல்படுவதற்கு வாய்ப்பு. சாதி, மதம், மண்டலம் ஆகியவை அரசியலில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை தலைவரை நியமிக்கும்" என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications