தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் - அமைச்சர் ரகுபதி காட்டம்
புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளன. சிக்கந்தர் தர்கா சார்பில் கந்தூரி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சில இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தால் மத ரீதியிலான பிரச்சனை வரக்கூடும் என்று கூறி போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரையில் 144 தடை உத்தரவை ஆட்சியர் சங்கீதா பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த 144 தடை உத்தரவை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி புனிதம் காக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்பினர் சார்பில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று சிலர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தமிழ்நாட்டில் அது நடக்காது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதனை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications