வாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்
புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் வாரயிறுதி நாட்களில் சைக்கிளில் உலா சென்று பொதுமக்களை சந்திக்கும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்றும், இன்றும் இதற்காக புதிதாக வாங்கப்பட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு தனி ஆளாக கட்சியினர், பாதுகாவலர்கள் என கூட்டத்தை தவிர்த்து தனி ஆளாக விராலிமலையை வலம் வந்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் இப்போதே வியூகங்களை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டார் விஜயபாஸ்கர்.
சுறுசுறுப்பு
தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான துறையை நிர்வகிப்பவர் விஜயபாஸ்கர். சர்ச்சைகள் சங்கு சங்கரம் போல் சுழற்றி சுழற்றி அடித்தாலும் அசராமல் அனைத்தையும் எதிர்கொண்டு அரசியல் செய்து வருகிறார் இவர். குட்கா தொடங்கி சுஜித் உயிரிழப்பு வரை எத்தனையோ புகார்களும், விமர்சனங்களும் இவரை வட்டமடித்துள்ளன. ஆனால் அனைத்தையும் அசாதாரண துணிச்சலால் எதிர்கொண்டு நடைபோடுகிறார்.
விராலிமலை
திருச்சி மாவட்டத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தையும் ஒன்றாக இணைக்கும் விராலிமலை தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் 2021-ம் ஆண்டும் விராலிமலையில் தொகுதியிலேயே போட்டியிட விரும்பும் விஜயபாஸ்கர் இப்போதே தனது வெற்றிக்கான வியூகங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.
மக்கள் சந்திப்பு
பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ இன்னோவா கிரிஸ்டா காரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு செல்லாமல், வாரத்தில் இரண்டு நாட்கள் தொகுதி மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டு அதற்காக பிரத்யேக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார் விஜயபாஸ்கர். காலை நேரத்தில் சைக்கிளை மிதித்துக்கொண்டு கடைவீதிகளுக்கு செல்வது, தெருக்களில் தாய்மார்களை சந்திப்பது என அதிரடி கிளப்ப உள்ளார்.
சோதனை
நேற்றும், இன்றும் விராலிமலை தொகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய விஜயபாஸ்கருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்ததை அடுத்து, இனி வரும் வாரங்களில் இதனை முழுமையாக பின்பற்ற உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2021 தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்று ஒரு எம்.எல்.ஏ.வாகவாவது ஆக வேண்டும் என உறுதியுடன் உள்ளார் விஜயபாஸ்கர்.