புதுக்கோட்டை நர்சிங் மாணவி மரணம்.. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என எஸ்.பி விளக்கம்!
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உயிரிழந்த நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், வீட்டில் இருந்து மாயமான நிலையில் அதே ஊரில் உள்ள கிணற்றில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டார். இதனை தற்கொலை வழக்காக வடகாடு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பெற மறுத்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தினர். மாணவியின் இறப்பில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்ததால்தான் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று வெளியிட்ட தகவலில், நர்சிங் மாணவியும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்துள்ளனர். பின்னர், சொந்த காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர். மன அழுத்தம் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்படவில்லை என தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார் என சமூக வலைதளத்தில் பரவும் தகவல் தவறானது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications