மானிய விலை டீசல் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.. புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் ஸ்டிரைக்
புதுக்கோட்டை: மானிய விலை டீசலை வழங்க லஞ்சம் கேட்கும் மீனவளத்துறை அதிகாரிகளை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
விசைப்படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 1,800 லிட்டர் டீசல் தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 மாதங்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு, கடந்த 15-ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய, 900 லிட்டர் மானிய விலை டீசலை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

படகு ஒன்றிற்கு 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் மரிய விலை டீசலை தருவோம் என அதிகாரிகள் மிரட்டுவதாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எதற்கெடுத்தாலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தங்களை இம்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் மீனவர்கள் சாடியுள்ளனர். கிட்டத்தட்ட கடந்த 8 நாட்களாக மானிய விலை டீசலை தங்களுக்கு தராமல், மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் ஒருவார காலத்திற்குள் 900 லிட்டர் டீசலை தாங்கள் வாங்கா விட்டால், அதை அடுத்த மாதத்தில் பெற முடியாது எனவே பாதி மாதத்திற்குரிய 900 லிட்டர் டீசல் தவணையை பெற முடியாமலேயே போய்விடும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலுக்கு செல்வதற்காக எங்களுக்கு அரசு தான் மானிய விலையில் டீசல் தருகிறதே தவிர, அதிகாரிகள் யாரும் அவர்களது சொந்த பணத்தை போட்டு எங்களுக்கு டீசல் தருவதில்லை. பின் எதற்கு எங்களுக்கு உரிய டீசலை தர அதிகாரிகள் மறுக்கின்றனர் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது பற்றி மிகவும் கொந்தளிப்புடன் பேசிய மீனவர்கள், எங்களுக்கு கொடுக்க கூடிய மானிய விலை டீசலை, அதிகாரிகளின் பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த சொத்திலிருந்தா நாங்கள் கேட்கிறோம் என பொரிந்து தள்ளினர்.
கோட்டைப்பட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் 2 மாதத்திற்கு பிறகு சில நாட்களாக தான் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
அதற்குள் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளது மற்ற மாவட்ட மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications