கலவரம் செய்ய பாஜகவினர் முயற்சி.. வழக்கு பதியாமல் போலீஸ் மெத்தனம் -அமைச்சர் ரகுபதி பரபர குற்றச்சாட்டு
புதுக்கோட்டை: வழக்கறிஞர் சங்கம் நடத்திய கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ரகளை செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை மெத்தனமாக இருந்துவிட்டது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி "அதிமுகவை விட திமுகவிற்கு பொதுமக்கள் மீது அக்கறை அதிகம் இருக்கிறது என்றும் தங்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் எதையும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை எனவும் கூறினார்."
"ஆன்லைன் சூதாட்டம் ஆன்லைன் லாட்டரி தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட மோசமான சட்டத்தால்தான் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. தற்போது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

குட்கா டைரி
அதனால்தான் புதிய சட்டம் இயற்றப்படவில்லை. இருப்பினும் எங்கெங்கெல்லாம் சூதாட்டம் நடக்கிறதோ அங்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் குட்கா கஞ்சா விற்பனை எந்தளவுக்கு இருந்தது என்றும் யார் யாருடைய பெயர்கள் டைரியில் இருந்தது என்பதும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அரசு நடவடிக்கை
வெளி மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சா குட்கா ஆகியவற்றை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில்தான் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பாஜக ரகளை
அப்போது அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 5 வழக்கறிஞர்கள்
வெளியில் உள்ள நபர்களை அழைத்து வந்து பிரச்சனை செய்துள்ளனர். இந்தியாவிலேயே பாரதிய ஜனதா கட்சி போன்ற மோசமான கட்சி இல்லை. எங்கேயாவது கலவரத்தை எற்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்து அரசியல் செய்து வருகின்றனர். நடந்த நிகழ்விற்கு காவல்துறையினர் பாஜக வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.

போலீஸ் மெத்தனம்
ஆனால் காவல்துறை மெத்தனமாக இருந்துவிட்டது. அதன் காரணமாக அவர்கள் தப்பித்து சென்றார்கள். இல்லாவிட்டால் அத்தனை பேர் மீதுமே வழக்குப்பதிந்து இருக்க வேண்டும். ஆனால் காவல்துறை செய்யவில்லை. காரணம் மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் இன்று தமிழ்நாட்டில் எங்கேயாவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களுடைய கணக்கு ஒருபோதும் நிறைவேறாது." என்றார்.











Click it and Unblock the Notifications