அரசு அதிகாரிகள் மெத்தனம்.. திறனற்ற அறநிலையத்துறை.. தொடர் தேர் விபத்தால் கொதித்தெழுந்த அண்ணாமலை
புதுக்கோட்டை: தமிழகத்தில் இன்று புதுக்கோட்டையில் தேர் விபத்து நடந்ததில் 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தேர் விபத்துகள் நடைபெறுவதற்க அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் , இந்து அறநிலையத்துறையின் திறனற்ற செயல்பாடும் தான் காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று கோவிலில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டையில் சரண கோஷங்களுடன் நகர்ந்த சாமி தேர் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது- 7 பேர் படுகாயம்!
விபத்தில் சிக்கிய தேர்
இதையொட்டி தேரோட்டத்துக்காக தேர் தயார் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை தேரை பக்தர்கள் படம் பிடித்து இழுத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
8 பேர் காயம்
இதனை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். இருப்பினும் தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தேர் விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அண்ணாமலை டுவிட்
இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிகாரிகள் தான் காரணம்
தமிழக பாஜக சார்பாக மாவட்ட தலைவர் செல்வன் அழகப்பன், காயமடைந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்துள்ளார். அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும் இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பாட்டாலும் இதுபோன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கையாகும்'' என தெரிவித்துள்ளார்.