12 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை.. நான்கே மாதங்களில் தீர்ப்பு
புதுக்கோட்டை: விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாதவன் (27) என்ற இளைஞருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். 27 வயதாகும் இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விராலிமலை ஆசாரி தெரு பகுதியில் கூலி வேலைக்குச் செய்து வந்தார்.

12 வயது சிறுமி
அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட இந்த கொடூரன், அந்த வீட்டிற்குள் நுழைந்து 12 வயது சிறுமியைத் தாக்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது அந்த இளைஞர் தப்பி ஓடி விட்டார்.

போக்சோ சட்டம்
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதவனை கைது செய்தனர். மேலும், குண்டர் சட்டத்தின் கீழும் மாதவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பரபர தீர்ப்பு
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாதவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், சிறுமியைத் தாக்கிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டுக் காலம் கடுங்காவல் தண்டனையும் விதித்துப் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

நான்கே மாதம்
தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications