"என் உயிர் போனாலும்.. தமிழ்நாட்டில் தான் போகும்!" திடீரென உணர்ச்சிவசப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன்
புதுக்கோட்டை: ஆயுர்வேத சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
Recommended Video
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே இருக்கும் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது. இதனைத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநர் தமிழிசை
இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குத் தேசியக்கொடிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நன்மை நடக்கிறதோ.. அங்கெல்லாம் வருவது என் வழக்கம்.. நான் ஒரு அலோபதி டாக்டர் தான். ஆனால் எனக்கு இயற்கை மருத்துவம் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.

தேசியக் கொடி
நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட வரும் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீட்டிலும் தேசியக் கொடியைப் பொதுமக்கள் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

தவறாகச் சித்தரிப்பு
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டத்தின் மூலம் நாட்டில் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசி வரும் பலரும் கூட இந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நான் தேசிய கல்விக் கொள்கை குறித்துப் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டது. நாம் அனைவரும் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னதை, இந்தி கற்றுக் கொள்ளும்படி சொன்னதாகத் திரித்துவிட்டனர்.

உயிரே போனாலும்
நாம் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும். இதைத்தான் நான் கூறினேன். இணையத்திலும் மனதைக் காயப்படுத்தும் வகையில் பதிவிட்டனர். ஆளுங்கட்சியின் அதிகார நாளேடும், தமிழகத்தில் தமிழிசை ஏன் வாலை ஆட்டுகிறார் என்று கேட்டுள்ளனர். இது என் நாடு, நான் தமிழச்சி, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்.

உரிமை உண்டு
தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதைப் பற்றிப் பேச எனக்கு முழு உரிமை உள்ளது. என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதில், என்னுடைய பங்கு எப்பொழுதும் இருக்கும். ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம் தேவையில்லை, அதை மதிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications