குடிநீரில் மனிதகழிவு.. சிபிசிஐடியின் அடுத்த மூவ்.. வேங்கைவயல் விஷயத்தில் உண்மை கண்டறியும் சோதனை?
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இன்னும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் 112 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இருப்பினும் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் இந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அன்னவாசல் ஒன்றியத்தில் வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 பட்டியலின மக்கள் அந்த குடிநீரை பயன்படுத்திய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் பரிசோதிக்கப்பட்டது.

மலம் கலக்கப்பட்டது
அப்போது பட்டியலின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. சாதிய வன்மத்தால் மலம் கலந்ததும் அம்பலமானது. இது தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது மாற்று இடத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை
இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதுபற்றிய புகாரில் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் கிராமம், காவிரி நகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திணறும் போலீஸ்
இதுவரை 45 நாளில் 112 பேரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். இருப்பினும் கூட யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த விசாரணையின்போது குடிநீர் தொட்டியில் மலம் கலந்த உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். விசாரணையின்போது ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் உண்மையை கண்டறிந்து குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் உள்ளனர்.

உண்மை கண்டறியும் சோதனை
இந்நிலையில் தான் விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையிலும், அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் அனுமதி பெற்று அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் இன்னும் எந்த விஷயமும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications