4 வருஷம் ஆச்சு.. இன்னும் நீதி கிடைக்கல! தேர்தல் புறக்கணிப்பில் வேங்கை வயல் மக்கள்!பரபர புதுக்கோட்டை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள்.
புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று அந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. சாதிய வன்மம் நிறைந்த இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
வேங்கை வயல்
தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறிய நிலையில் இந்த வழக்கு வெள்ளனூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் சுமார் 75 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிபிசிஐடி விசாரணை
இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டு வேங்கை வயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 150 நபர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றமும் விசாரணை ஆணையத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைத்தது. இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்திய பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிநீர் தொட்டியில் மனித கழிவு
இந்த வழக்கில் அறிவியல் ரீதியாக ஆதாரங்கள், தடயங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்தனர்.. மேலும், கடந்த 2025 ஜனவரி 20-ந் தேதி, இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டிலும் தாக்கல் செய்திருந்தனர். அதில், குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
மேலும் இந்த வழக்கில் இருந்த வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டது. ஒரு சம்பந்தமும் இல்லை இதையடுத்து, மார்ச் 12ம் தேதி குற்றவியல் நடுவர் மன்றத்தில் மேற்கண்ட 3 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு மார்ச் 20-க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, "எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், எங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று 3 பேருமே நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர் வேங்கை வயல் பகுதி மக்கள். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்காததை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக திமுக அரசு சித்தரிப்பதை கண்டித்தும் 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு
ஊர் மக்கள் மீதே குற்றம் சாற்று இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பது யார் என அரசுக்கு தான் தெரியும். தவறு செய்தவர்களைத்தான் தண்டிக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக தாங்கள் சொன்னபோது அப்போது பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு உத்தரவாதங்களை வழங்கினர். கடைசியில் தான் அப்போது வாக்களித்தோம். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவே தேர்தலை புறக்கணித்துள்ளோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications