கந்துவட்டிக்காரர்களை விட மோசம்! சிறையில் கம்பி எண்ணும் முத்தூட் பைனான்ஸ் ஊழியர்! மக்களே ஜாக்கிரதை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தவரின் 11 வயது மகளை கடத்திச் சென்ற முத்தூட் நிதி நிறுவன ஊழியர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கடன் வேண்டுமோ கடன் என அலைபேசி வாயிலாக கூவிக் கூவி அழைக்கும் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுத்த பிறகு தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்குகின்றன. கந்துவட்டிக்காரர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல முன்னணி தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தவணை செலுத்த தவறிய நாட்களுக்கு இத்தனை சதவீத வட்டி என கொடுத்த காசுக்கு மேல் அடாவடியக அபராதத் தொகையை போட்டு அப்பாவி மக்களின் குரல் வளையை நெரித்து வருகின்றன.

இது போன்ற நிதி நிறுவன அமைப்புகளை உன்னிப்பாக கண்காணித்து அவற்றின் மீது புகார்களின் அடிப்படையில் சுளுக்கெடுக்க வேண்டிய ரிசர்வ் வங்கி நிர்வாகமோ கண்டும் காணாமல் விடுகிறது. இதனால் கேட்பதற்கு ஆளில்லை என்ற எண்ணத்தில் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டு வருகின்றன.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஒரு கொடூர நிகழ்வு நடந்துள்ளது. மருதூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான வனத்துராஜா என்பவர் முத்தூட் நிதி நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். மாதம் மாதம் தவணை செலுத்தி வந்த அவர் ஜூன் மாதம் மட்டும் தவணை செலுத்த வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முத்தூட் நிதி நிறுவன ஊழியரான விக்னேஷ் என்பவர் வனத்துராஜா வீட்டுக்கு சென்ற தவணையை வசூலிக்க சென்ற போது வனத்துராஜா வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது 11 வயது மகளை முத்தூட் பைனான்ஸ் ஊழியர் விக்னேஷ் கடத்திச் சென்றிருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்து பதறிப்போன வனத்துராஜா கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சற்றும் தாமதிக்காமல் களமிறங்கிய கீரனூர் போலீஸார், முத்தூட் பைனான்ஸ் ஊழியர் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற அடாவடி நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ச்சியக நடந்து வருகின்றன.
ஆகையால் தமிழக அரசும், போலீஸாரும் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை அழைத்து ஒரு அறிவுறுத்தல் கூட்டம் நடத்த வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications