உடலை குத்திக்கிழித்த காளை.. நாளை வெளிநாடு பயணம்.. இன்றுபோன உயிர்..மஞ்சுவிரட்டில் இளைஞர் பலி..சோகம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நடந்த நிலையில் பார்வையாளராக சென்ற 25 வயது இளைஞரை காளை பயங்கரமாக முட்டியது. நாளை வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் அந்த இளைஞர் இன்று பலியானார். இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை போன்று மஞ்சுவிரட்டும் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் மஞ்சு விரட்டு போட்டிகள் பிரபலமாகும்.
மஞ்சு விரட்டு என்பது ஜல்லிக்கட்டு போட்டி போன்று இருக்காது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் ஒவ்வொன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்படும் நிலையில் வயல்வெளியில் நடக்கும் மஞ்சு விரட்டில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்படும்.

சிவராத்திரியையொட்டி மஞ்சுவிரட்டு
இதனால் ஒரே நேரத்தில் பல காளைகள் களத்தில் நிற்கும். இதனால் போட்டியை பார்க்க செல்லும் நபர்கள் தங்களின் வாகனங்களின் மீது ஏறி நிற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் மகாசிவராத்திரியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இங்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடக்கும் நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் மஞ்சுவிரட்டு நடந்தது.

500 காளைகள் பங்கேற்பு
இதில் தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500க்கும் அதிகமான காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தழுவினர். பல காளைகள் ஆக்ரோஷமாக யாரையும் அருகே கூட விடவில்லை. இந்த போட்டியை ஏராளமானவர்கள் வாகனங்கள் மீது நின்றபடி கண்டு களித்தனர். இந்த போட்டியை திருமயம் அருகே கண்டனூர் புதுவயல் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவா(வயது 25) ரசித்து பார்த்தார்.

காளை முட்டி பலி
இந்த வேளையில் காளை ஒன்று அவரை கொம்புகளால் முட்டி தூக்கி எறிந்தது. இதில் பலத்த காயமடைந்த சிவா துடிதுடித்தார். இதைடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நாளை வெளிநாடு செல்ல..
காளை முட்டி இறந்துபோன சிவா வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவர் பணிக்காக வெளிநாடு புறப்பட்டு செல்ல இருந்த நிலையில் தான் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்றார். இந்த வேளையில் எதிர்பாராதவிதமாக காளை முட்டி அவர் இறந்துள்ளார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications