திருவிழாவுக்குச் சென்ற பக்தர்களுக்கு சோகம்.. சித்தேஷ்வர்நாத் கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி
புனே: பீகார் மாநிலத்தில் உள்ள சித்தேஷ்வர்நாத் கோயில் திருவிழாவுக்குச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 35க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள மக்தூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது பாபா சித்தேஷ்வர்நாத் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் கோலாகலமாகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். அப்போது, கடும் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

7 பேர் உயிரிழப்பு சம்பவத்தை அரசு நிர்வாகம் உறுதி செய்துள்ளது. உடனடியாக காயமடைந்தவர்கள் அனைவரும் மக்தும்பூர் மற்றும் ஜெகனாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து, கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், பூ விற்பனை செய்பவருடன் ஏற்பட்ட சண்டையில் தன்னார்வலர்கள் தடியடியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, கோயில் நிர்வாகத்தினர் அந்த இடத்தில் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினரின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்தது என்றார். இதனிடையே, கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்தவில்லை என்று ஜெகனாபாத் துணைப் பிரிவு அதிகாரி விகாஷ் குமார் தெரிவித்து, குற்றத்தை மறுத்துள்ளார்.
இதுகுறித்து, ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெகனாபாத் மாவட்டத்தின், மக்தும்பூரில் உள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications