மாடியில் இருந்து குதி.. வீடியோ கேமால் வந்த வினை.. சிறுவன் உயிரிழந்த கொடூரம்
புனே: புனே மாவட்டத்தில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்த சிறுவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்கொல்லி கேம் விளையாடியபோது அதில் அளிக்கப்பட்ட கட்டளைக்காக மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என்று பெற்றோர் சந்தேகிக்கின்றனர். மேலும், சிறுவனின் அறையில் வரைந்து வைத்திருந்த ஓவியத்தில் அவரது வீட்டின் வரைபடமும், பால்கனியில் இருந்து குதிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புனே மாவட்டம், பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் ஆர்யா ஸ்ரீராவ் என்ற 15 வயது சிறுவன் தனது பெற்றோருடன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரனான ஆர்யா ஜூலை 26 ஆம் தேதி 14 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, ஆர்யாவின் பெற்றோர் கூறுகையில், ஆர்யா மிகவும் நன்றாகப் படிக்கக்கூடியவன். உயரம் என்றாலே அவனுக்கு மிகுந்த பயம். அவர் குதித்த பால்கனியின் அருகில் கூட ஆர்யா செல்லமாட்டான். அவன் கடந்த சில நாள்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருந்தான். படிப்புக்காகத்தான் லேப்டாப்பை பயன்படுத்துகிறான் என்றே நினைத்தோம். பின்னர்தான் ஆர்யா வீடியோ கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆர்யாவிடம் இருந்து லேப்டாப்பை வாங்க முயன்றபோது, மிகுந்த கோபமடைந்தான். எனவே, இந்த தற்கொலை சம்பவமும் வீடியோ கேமில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக செய்திருக்கலாம் என்று நினைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
ஆர்யா 14 ஆவது மாடியில் குதித்து உயிரிழந்துள்ளார். ஆனால், அந்த சம்பவம்கூட அவரது பெற்றோருக்கு உடனடியாகத் தெரியாமல் போயுள்ளது. குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்ஆப் குழுவில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்தபோது தான் இச்சம்பவம் குறித்து ஆர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
அப்போது, ஆர்யாவின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் இதனை கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆர்யாவின் அறைக்குள் போலீஸார் சோதனை செய்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது அறையில் ஒரு ஓவியம் வரையப்பட்ட நோட் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஓவியத்தில், ஆர்யா வசித்த வீட்டின் வரைபடமும், பால்கனியில் இருந்து குதிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ப்ளு வேல் என்ற கேமை ஆர்யா விளையாடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து, ஆர்யா விளையாடுவதற்காக பயன்படுத்திய லேப்டாப்பைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லேப்டாப்பில் பாஸ்வேர்டு போடப்பட்டிருப்பதால் லேப்டாப்பை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
குழந்தைகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். செல்போன், லேப்டாப் போன்றவற்றை எந்த மாதிரியான விசயத்துக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தி ஏதேனும் பிரச்னை இருப்பின் அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications