சின்னதா மாற்றி யோசிச்சேன்.. ஒரே மாதத்தில் 3 கோடி சம்பாத்தியம்.. தக்காளி விவசாயி சொன்ன சீக்ரெட்
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த விவசாயி தக்காளி பயிரிட்ட நிலையில், ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3 கோடி சம்பாதித்து சாதித்து இருக்கிறார். அதற்காக அவர் செய்த விஷயத்தை பற்றி பார்ப்போம்.
கடந்த மே மாதம் தக்காளி விலை மிக குறைவாக இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் பலர் நொந்து போய் அந்த பயிரை பயிரிடாமல் விட்டார்கள். ஏற்கனவே மார்ச் மாதத்தில் பயிரிட்ட குறைவான விவசாயிகளுக்கும் பருவ நிலை மாறுபாடு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக மே மாதம் ஏற்பட்ட கடுமையான வெயில் தக்காளி பயிரை மோசமாக பாதித்தது. இந்த கோடையில் தக்காளி பயிரை கடுமையாக நோய் தாக்கியது. எனவே தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் பலர் கைவிட்டார்கள். இதனால் தக்காளி அதிகப்படியான விலை உயர்வை சந்தித்தது.
இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை ஜுன் மாதத்தில் இருந்தே ஏறத்தொடங்கியது. ஜூலை மாதத்தில் ராக்கெட் வேகத்தில் ஏறியது.தக்காளி விலை சதம் அடித்தது. தற்போது தக்காளி ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை இந்தியாவில் எல்லா பகுதியிலும் விற்கிறது.
தக்காளி பயிர் அறுவடைக்கு வர குறைந்தது 100 முதல் 130 நாட்கள் ஆகும். அந்த வகையில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தான் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளார்கள். இதனால் தக்காளி விலை அதிகளவில் குறைந்தது இன்னும் ஒரு மாதம் ஆகும். எனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி பயிரிட்ட பல விவசாயிகள் மகிழ்க்சி அடைந்துள்ளனர்.
தக்காளி விவசாயிகளில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர். சிலர் கோடீஸ்வர்களாகவும் ஆகி வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அந்த மாநிலத்தின் புனே மாவட்டம் பஞ்கர் கிராமத்தை சேர்ந்த 36 வயதாகும் ஈஸ்வர் கெய்கர் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார்.
இதில் தக்காளி அறுவடை மூலம் அவருக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. அதேநேரம் 12 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலே ஒருவர் கோடீஸ்வரர் தான் என்றும் அவருக்கு 12 ஏக்கர் தக்காளி போட்டிருக்கிறார் என்றால், ஒரு ஏக்கருக்கு 50 என்று வைத்தால் கூட 600 டன் தக்காளி கிடைத்திருக்கும். நிச்சயம் அவர் கோடீஸ்வரர் தான் என்கிறார்கள் விவசாயிகள்.
முன்பெல்லாம் தக்காளி விலை அடிமாட்டு விலையாக இருக்கும். அதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை சாலையில் கொட்டுவார்கள், விலை இல்லாத காரணத்தால் அப்படியே டிராக்டரை வைத்து அழிக்கவும் செய்வார்கள்.இதனால் காணும் போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவார்கள். அப்படித்தான் புனே விவசாயி ஈஸ்வர் கெய்கரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் விலை போகாத தக்காளியை வீணடித்தார்.
இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளி பயிரிட்ட அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. இதுபற்றி விவசாயி ஈஸ்வர் கெய்கர் கூறும் போது. எனக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். கோடை வெயிலில் இருந்து பயிரை பாதுகாக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
கடந்த ஜூன் 11-ந் தேதி எனக்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.37 கிடைத்தது. கடந்த 18-ந் தேதி கிலோ ரூ.110-க்கு விற்றேன். ஜூன் 11-ந் தேதி முதல் இதுநாள் வரை 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்து அதன் மூலம் ரூ.3 கோடி சம்பாதித்துள்ளேன். இன்னும் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு தக்காளி சாகுபடி மற்றும் போக்குவரத்து என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஏற்பட்டது. எனக்கு மொத்தமாக 3 கோடி ரூபாய் லாபம் ஒரு மாதத்தில் கிடைத்துள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் தக்காளியால் பெரும் நஷ்டங்களை சந்தித்தேன். 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் உற்பத்தி செலவு அளவுக்கு தான் வருமானம் கிடைத்தது. கடந்த மே மாதம் கூட கிலோவுக்கு ரூ.2.50 மட்டுமே விலை போனதால் தக்காளியை சாலையில் கொட்டிவிட்டேன். தற்போது நல்ல லாபம் கிடைச்சிருக்கு" என்றார்.












Click it and Unblock the Notifications