முத்துராமலிங்கத் தேவர் உறவுகளை சந்திக்கும் 5 அதிமுக மாஜி அமைச்சர்கள்! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் உறவுகளை சந்தித்து பேசுவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கின்றனர்.
முத்துராமலிங்கத் தேவர் தங்கக்கவசம் விவகாரத்தில் தாங்கள் வங்கியில் உரிமைக் கோரி வரும் நிலையில் அதற்கு அவர்களது ஆதரவு கோரி இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் அவரது உறவுகளை சந்திக்கவுள்ளார்கள்.

தேசியம் -தெய்வீகம்
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆண்டுதோறும் அக்டோபர் 28,29,30 ஆம் தேதிகளில் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமம் மட்டுமல்லாமல் முக்குலத்தோர் அடர்த்தியாக வாழும் பகுதிகள் அனைத்திலும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தங்ககவசம்
இதனிடையே முத்துராமலிங்கத் தேவர் தங்ககவசத்தை வங்கியில் இருந்து எடுக்கும் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளை சந்திக்க இன்று பசும்பொன் செல்கிறது. முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ் ஆகிய ஐவரும் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்களாக தேவர் நினைவிட பொறுப்பாளர்களை சந்தித்து பேசவுள்ளனர்.

ஓ.பி.எஸ். திட்டவட்டம்
அதிமுக பொருளாளர் என்ற முறையில் தாம் தான் முத்துராமலிங்கத் தேவர் தங்ககவசத்தை வங்கியில் கையெழுத்திட்டு எடுத்துக் கொடுப்பேன் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு வேளை அவர் அவ்வாறு எடுத்துக் கொடுத்துவிட்டால் அது தங்களுக்கு பின்னடைவை தரும் என அஞ்சுகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதனால் தான் இந்த விவகாரத்தில் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வருகிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஐவர்.

ஜெயலலிதா வழங்கியது
கடந்த 2014ஆம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடையில் தங்ககவசம் மற்றும் தங்க கிரீடம் செய்து கொடுத்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி வரை இருக்கும் நிலையில் மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கி லாக்கரில் இருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications