Knife fish: ராமேஸ்வரம் மீனவர் வலையில் கத்தி மீன்! உடம்பு பூரா முள்ளு! ஆனாலும் கிலோ எவ்வளவு தெரியுமா?
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பனில் மீனவர்கள் வலையில் 6 அடி நீள கத்தி மீன் சிக்கியது. இதன் எடை 25 கிலோவாக இருந்தது. இந்த மீன் ஒரு கிலோ எத்தனை ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பதையும் இதன் பயன்களையும் பார்க்கலாம்.

பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று விசைப்படகை எடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பினர். அப்போது அவர்களுக்கு கிடைத்த மீன்களை தனித்தனியே பிரித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அருளானந்தம் என்ற மீனவரது வலையில் 6 அடி நீளம் கொண்ட கத்தி மீன் சிக்கியிருந்தது. இதை எடை போட்டு பார்த்த போது 25 கிலோ இருந்தது. இந்த மீன் கிலோ ரூ 250 க்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.
அந்த வகையில் 25 கிலோ என்ற எடை வீதம், ரூ 6,250-க்கு கத்தி மீன் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த மீன் வேகமாக நீந்தும். மணிக்கு சராசரியாக 100 கி.மீ. வரை நீந்தும். மயிலின் தோகை போன்று இந்த மீனுடைய துடுப்புகள் அமைந்திருக்கிறது.
இதனால் நாங்கள் இதை மயில் மீன் என்றும் அழைப்பதுண்டு. கத்தி மீன்கள், இந்திய பெருங்கடலில் கூட்டம் கூட்டமாக காணப்படும். இது மன்னார் வளைகுடா பகுதிக்கு இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கலாம்.
இந்த மீனின் தாடை, வாள் போன்று இருக்கும். இதனால் அந்த தாடையை பயன்படுத்தி வேட்டையாடி தனக்கான உணவை உண்ணும். எதிரிகளையும் வீழ்த்தும். கடலின் மேற்பகுதியில் தாவி தாவி நீந்தும் போது படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கத்தி மீன் தனது வாழ்நாளில் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் நீந்தி, வெவ்வேறு கடல் பகுதிக்கு இடமாறிக் கொண்டே இருக்கும். இதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து இதை பிடிக்க முடியாது என்றனர்.
கத்தி மீன்களில் உயர்தர புரதங்கள், கால்சியம், விட்டமின்கள் உள்ளிட்டவை உள்ளன. இது நரம்புகளை வலுப்படுத்தும். கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதயம் சீராக இயங்க உதவுகிறது. மூளையின் செயல்பாட்டிற்கு இந்த மீன் வழிவகுக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு உகந்த மீன். இதில் முட்கள் அதிகம் இருக்கும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும்.இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவரின் வலையில் அரியவகை டூம்ஸ்டே மீன் (இறுதி நாள்) சிக்கியிருந்தது. இது சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இந்த வகை மீன்களை ஆசிய கடல் பகுதிகளில்தான் இருக்கும். அது போல் மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்டவை.
டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக் கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்கிறார்கள். இதற்கான எந்த அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை இப்படிப்பட்ட சூழலில் டூம்ஸ்டே மீன், சிக்கியிருந்தது சமூகவலைதள பக்கத்தில் விவாத பொருளானது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications