கலெக்டர் பெயரிலேயே மோசடி! 38 லட்சம் என்ன ஆனது? இராமநாதபுரத்தில் பரபர.. சங்கத்து ஆளுங்க வந்துட்டாங்க!
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக ரூ.38 லட்சத்திற்கு நிதி அனுமதி கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி செயலாளர் - கணக்கர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்கு 2023- 24 ஆம் ஆண்டிற்கு 15 ஆவது மத்திய நிதி குழுவால் வரையறுக்கப்பட்ட மானிய ஒதுக்கீடு பணிகளுக்கு கலெக்டரின் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் கலெக்டரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஊராட்சி முன்னாள் செயலாளர் ரகுவீர கணபதி மற்றும் முன்னாள் கணக்கர் துர்கா ஆகியோர் சில பணிகளுக்கு நிதி அனுமதி வழங்கினார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக அனுமதிக்கப்பட்ட சில பணிகளுக்கு மின் கோப்பு வாயிலாக கலெக்டரின் அனுமதி பெறப்பட்ட நிலையில் அந்தப் பணியுடன் சேர்த்து கூடுதலாக கலெக்டரின் ஒப்புதல் இன்றி உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கலெக்டர் பெயரில் போலியாகவும் தன்னிச்சையாகவும் ரூ. 29 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கினார்கள் என கூறப்படுகிறது.
மேலும், கமுதி வட்டாரத்திற்கான பணியில் போர்வெல் அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் ஒப்புதல் பெற்ற பணியினை குடிநீர் குழாய் விரிவாக்க பணியாக நிர்வாக அனுமதி வழங்காமல் போர்வெல் அமைத்து கழிப்பறை கட்டும் பணியாக நிர்வாக அனுமதி வழங்கிய நிலையில், கழிப்பறை கட்டும் பணிக்கு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி குடிநீர் வகைப்பாட்டில் இருந்து செலவினம் செய்ய முடியாது என கூறப்படுகிறது.

ஆனால் இதை மீறி கலெக்டரின் பெயரில் அவரிடம் ஒப்புதல் பெறாமல் நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கலெக்டரின் ஒப்புதல் இன்றி போலியாக மேற்கண்ட இருவரும் மொத்தம் ரூ. 38 லட்சத்திற்கு நிதி அனுமதி வழங்கியதால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணி நடைபெற்றுள்ளது. கலெக்டரின் அனுமதி பெறாமல் ரூ.38 லட்சத்திற்கு பணி மேற்கொண்டு நிதி அனுமதி வழங்கிய மேற்கண்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் மனு அளித்தார்.
அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பால்பாண்டியன் முன்னாள் ஊராட்சி செயலாளர் ரகுவீர கணபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக முன்னாள் பிரிவு உதவியாளர் துர்கா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட துர்கா மீது அவர் எந்த கோப்பிலும் கையெழுத்திடாத நிலையில் முன்னாள் ஊராட்சி செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துர்கா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications