பாதயாத்திரைக்கு தயாரான சொகுசு வாகனம்.. அண்ணாமலை தேரில் இத்தனை வசதிகளா.. அடேங்கப்பா
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை ஓய்வெடுப்பதற்காக பல வசதிகளை கொண்ட வாகனம் தயாராகியுள்ளது. அதனை பாஜகவினர் தங்களின் முகநூலில் அண்ணாமலையில் தேர் என்று பதிவிட்டு வருகின்றனர். அந்த வாகனத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று பார்க்கலாம்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை பயணத்தை தொடங்குகிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. வேண்டும் மீண்டும் மோடி 2024 என்பது பாஜகவின் முக்கிய ஸ்லோகமாக உள்ளது. லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்குகால் பாய்ச்சலில் பாய தயாராகி விட்டார் அண்ணாமலை.
தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைக்க இருக்கும் தலைவர் அண்ணாமலையின் தேர்...
— Dharani R Murugesan (@Dharaniramnad) July 26, 2023
புறப்படுகிறது இராமேஸ்வரத்திலிருந்து...@annamalai_k @iamradioguru @EnMannEnMakkal pic.twitter.com/lTZMCPyXTW
2024ஆம் ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த எதிர்கட்சியினர் தயாராகி விட்டனர். இரண்டு கட்டமாக கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்றும் பெயரிட்டு ஆளும் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் ஆளும் பாஜகவும் ஆட்சியை தக்கவைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணி தமிழகத்திலும் குறைந்த பட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பாஜக போட்டியிடவுள்ள இடங்களில் வாக்குசாவடி முகவர்களை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணத்தை தொடங்கவுள்ளார்.
ராமேஸ்வரத்தில் நாளைய தினம் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கவுள்ளார். பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பாதயாத்திரையை தொடங்கி வைக்கவுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் 28,29 ஆம் தேதிகளிலும், 30 ஆம் தேதி பரமக்குடியிலும், 31 ஆம் தேதி திருவாடானை, சிவகங்கை தொகுதியிலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பத்தூரிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபயணம் சென்று தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவுள்ளார் அண்ணாமலை.
இந்த நடை பயணத்தில் புகார் பெட்டியும் வைக்கப்படவுள்ளது. அதில் திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புகார்கள், மக்களின் கோரிக்கையையும் புகார் பெட்டியில் மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியின் மீது விடியல.. முடியல என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் தேர்: அண்ணாமலை நாளை தொடங்கவுள்ள நடை பயணத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள சொகுசு பேருந்து ராமநாதபுரத்திற்கு வந்துள்ளது. இந்த பேருந்து காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் மேற்கூறையில் நின்று தொண்டர்களை சந்திக்கும் வகையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. சொகுசு பேருந்தின் பின் பக்கத்தில் சிறிய ஓய்வு அறையும், அதில் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. பேருந்து முழுவதும் பாஜக அரசின் சாதனைகள், திட்டங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்களும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடக்கி வைக்க வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் மாலை 5 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேசுவரம் சென்று தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு, அதன்பின்னர் ராமேஸ்வரம் பேருந்துநிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்கிறார். பின்னர் யாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இரவு ராமேஸ்வரம் தனியார் விடுதியில் தங்கும் அமித் ஷா, காலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பகல் 1.30 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார். அமித் ஷா வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்ட 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிக்கள், 60 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அண்ணாமலை தனது பாதயாத்திரையை நாளைய தினம் தொடங்கி ஆகஸ்ட் 19 வரைக்கும் பயணம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கி அம்பாசமுத்திரம் வரைக்கும் அவரது பயணத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையை நெருங்கும் அண்ணாமலை, ஜனவரி 5 ஆம் தேதி ஆவடி, மாதவரம், பொன்னேரி, குமுடிப்பூண்டி என ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கவுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை நடைபயணத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications