கரியில் ஓடிய ரயிலை போல் இருந்த பாஜக.. அண்ணாமலையால் இன்று புல்லட் ரயிலாக மாறியிருக்கு! -ஏ.சி.சண்முகம்
ராமநாதபுரம்: கரியில் ஓடிய ரயிலை போல் இருந்த பாஜக அண்ணாமலையால் இன்று புல்லட் ரயிலாக மாறியிருக்கிறது என புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் புகழாரம் சூடியுள்ளார்.
மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்களை வைத்துக்கொண்டே ஏ.சி.சண்முகம் இவ்வாறு கூறினார். அதுமட்டுமல்ல இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அண்ணாமலை திகழ்வதாகவும் தமிழ்நாட்டில் புதிய வரலாறை உருவாக்கவுள்ளார் எனவும் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் ஏ.சி.சண்முகம்.

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அமித்ஷா வருகைக்கு முன்னதாக சிறிய கட்சிகளின் தலைவர்கள் பேச வைக்கப்பட்டனர். அந்த வகையில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது.
தமிழ்நாட்டில் கரியில் ஓடிய ரயில் எஞ்சினை போல் பாஜக இருந்ததாகவும் பிறகு டீசல் எஞ்சினை போல் பாஜக இருந்ததாகவும் அதன் பிறகு மின்சார ரயிலாகவும் அண்ணாமலை வந்த பிறகு புல்லட் ரயிலாகவும் பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றார். இதன்மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் , தமிழிசை, எல்.முருகன் உள்ளிட்டோரை சூசகமாக கலாய்த்தார் ஏசி சண்முகம்.
இளைஞர்களின் காந்தசக்தியாக திகழும் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்த ஏசி சண்முகம், அமித்ஷா தான் மேன் ஆஃப் தி மேட்ச் என்றும் புகழாரம் சூடினார். 2019ல் வெற்றிபெற்ற இடங்களை விட 25 இடங்கள் கூடுதலாக வெற்றிபெற்று 3வது முறையும் மத்தியில் பாஜக ஆட்சி தான் அமையும் என நம்பிக்கை பொங்கக் கூறினார்.












Click it and Unblock the Notifications