அதிமுக நிர்வாகிகள் மண்டை உடைப்பு.. ஆலோசனை கூட்டத்தில் அடிதடியில் ஈடுபட்ட ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள்!
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆலோசனைக் கூட்டத்தின்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இரண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு மண்டை உடைந்தது.
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பேசிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடந்து வரும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தது. ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

கொந்தளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்தக் கூட்டத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கழகத்தின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான கட்சி நிர்வாகிகள் பேசினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாற்காலிகளை எடுத்து வீசினர்.

நாற்காலிகளை வீசி அடிதடி
இதனால் இந்த கூட்டத்தில் திடீரென ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாற்காலிகளை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் அங்கிருந்த இருக்கைகளை கொண்டு அடித்து, ஒலிபெருக்கியை வீசி அடிதடியில் ஈடுபட்டனர்.
Recommended Video

மண்டை உடைப்பு
இதில் முக்கிய நிர்வாகிகள் உட்பட்ட 3 பேர் காயமடைந்தனர். இருவருக்கு மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து கூட்டம் மீண்டும் நடந்தது. இந்தச் சம்பவத்தால் ராமநாதபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications