சர்ப்ரைஸ்! ராமேஸ்வரம் போகும் வழியில்.. மீனவர்கள் குடியிருப்புக்கு வண்டியை விட்ட முதல்வர் ஸ்டாலின்!
ராமநாதபுரம்: நேற்று மாலை திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் ராமேஸ்வரம் சென்றார். அப்போது அக்காள் மடம் பகுதியில் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் நேற்று முன்தினம் மதுரை வந்தார். முனிச்சாலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். பின்னர் இரவில் மதுரையில் தங்கிய அவர், நேற்று காலையில் காரில் ராமநாதபுரம் புறப்பட்டார்.

ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் பேராவூர் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.கவினருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நேற்று மாலையில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்றார் முதல்வர் ஸ்டாலின். செல்லும் வழியில் ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மற்றும் சேதுபதி நகர் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர்கள் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.

அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications