வடக்கு-மேற்கு பார்த்து சாப்பிட்டால் காய்ச்சல் வரும்..வீட்ல சண்டை வரும்! கலெக்டரை அதிர வைத்த முதியவர்
ராமநாதபுரம்: வடக்கு பார்த்து சாப்பிடாதீங்க, அப்படி சாப்பிட்டால் உடம்பு சரியில்லாம போகும் என்றும் மேற்கு பார்த்து சாப்பிட்டால் வீட்டில் சண்டை வரும் எனவும் கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை அதிர வைத்துள்ளார் மீனவ சமுதாயத்தை சேர்ந்த முதியவர் ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மீனவ சமுதாய மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.

அப்போது மாவட்ட ஆட்சியர் இருக்கை அருகே சென்ற மீனவ சமுதாயத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ஆட்சியரிடம் கையெடுத்து கும்பிட்டு நின்றபடி மீனவர்களை கைவிட்டுவிடாதீர்கள், கொஞ்சம் பார்த்து உதவி செய்யுங்க என வெள்ளந்தியாக கேட்டுக்கொண்டார். மீனவர்களை கடவுள் போல் காக்க வேண்டும் என்றவர் அதேபோல் ஏழைகளுக்கும் பதவிகளை வாங்கிக் கொடுங்க என்றவர் அடுத்ததாக மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அறிவுரை ஒன்றையும் கூறினார்.
வடக்கு பக்கம் பார்த்து சாப்பிட வேண்டாம் என்றால் அப்படி சாப்பிட்டால் காய்ச்சல் வரும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும் எனக் கூறினார். அதேபோல் மேற்கு பக்கமாக பார்த்தும் சாப்பிட வேண்டாம், அப்படி சாப்பிட்டால் வீட்டில் சண்டை வரும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அந்த முதியவர் அட்வைஸ் அளித்தார். மேலும், தெற்கு தலைவைத்து படுங்க என வாஸ்து ஜோதிடரை போல் டிப்ஸ் கொடுத்தார். அதனை சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், சரிங்கய்யா எனக் கூறி அந்த மீனவ சமுதாய முதியவரை அனுப்பி வைத்தார்.
முதியவரின் இந்த பேச்சால் குறை தீர்வு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பொதுவாக குறை தீர்வு முகாம் நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர்கள் இது போல் பேச அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் டவுன் டூ எர்த் என்று சொல்லும் அளவுக்கு அம்மாவட்ட மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications