வஞ்சிரம், மத்தி, நெத்திலி.. மூக்கை துளைக்க போகும் மீன்கள்.. நாளை முதல் கடலுக்குள் செல்லும் மீனவர்கள்
ராமநாதபுரம்: தமிழகத்தில் இன்று இரவுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்... மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வருடந்தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

என்ன காரணம்: ஏனென்றால், கோடை காலங்களிலேயே, மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இந்த காலகட்டத்தில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகளை பொரிக்கும்.. விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு, அந்த மீன் குஞ்சுகள் அழியும் நிலைமையே ஏற்பட்டுவிடும். எனவேதான், இந்த காலகட்டத்தில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துவருகிறது.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது.
எப்போதுமே தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். இதன்காரணமாக, தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களுக்கு வேலையின்றி தவிக்கும் நிலைமையும் ஏற்படும். குறைந்த ஆழத்திலேயே சென்று, கிடைக்கும் மீன்களை விற்று வருவார்கள்.
எனவே மீன்பிடி தடைக்காலம் முடியும்வரை, மீன்களுக்கு கிராக்கி இருக்கும்.. மீன்களின் விலையும் அதிகமாகவே உயர்ந்துவிடும்.. அந்தவகையில், இந்த வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மண்டபம் பகுதி உள்பட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களது படகுகளை கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்கள்..
உதிரி பாகங்கள்: கடலுக்கு செல்லாமல், படகில் பொருத்தியுள்ள பலகைகளை சீரமைத்தல், என்ஜின்களில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை நீக்கி பழுது பார்த்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைத்து, தங்களது விசைப்படகுகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்... இதைத்தவிர, வலைகள், போட் பலகை உள்ளிட்ட உபகரணங்களையும் சீரமைத்தனர்..
மீன்பிடி துறைமுகம்: 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்களது விசைப்படகுகளை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சீரமைத்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்..
கடலுக்கு செல்வதற்காக, மீன்பிடி வலைகள், மீன்களை சேகரித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், மீன்கள் அதிகமாக இருக்கும் இடத்தை காண்பிக்கும் அதிநவீன கருவிகள், கடலில் படகுகளை ஓட்டிச் செல்வதற்கான வழிகாட்டும் GPS கருவிகள் உள்பட மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகுகளில் ஏற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பைபர் படகுகள்: விசைப்படகுகளில் வலைகள், ஐஸ்கட்டிகள், டீசல் கேன்கள் உள்ளிட்ட பொருட்களை சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு சென்றுவருகிறார்கள்.. தடைகாலம் முழுமையாக நிறைவடைந்ததுமே, அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என்று மீனவ சங்கத்தினரும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே, இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். ஆர்வம் மிகுதியால் எல்லைதாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் தடை செய்யப்பட்ட வலைகளை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மீன்பிரியர்கள்: 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதால், ரகம் ரகமாக மீன்கள் கிடைக்க போகின்றன.. இது மீன்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications