ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, ஜன. 2 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. ஒரே கல்லில் ஆன மரகத நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தனிச்சிறப்பு பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு குடி கொண்டிருக்கும் மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அந்த ஒரு நாள் தான் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும். இதனால் ஆருத்ரா தரிசன நிகழ்வு இங்கு வெகு பிரசித்தி பெற்றது.
இந்நிலையில், வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி திருஉத்திரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அந்த வாரத்தில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications