“தமிழ்நாட்டில் தாமரையே மலராது.. கடல்ல தாமரை மலரும்னு மாநாடு நடத்துனாங்க".. பாஜக மீது கனிமொழி அட்டாக்
ராமநாதபுரம்: "தமிழ்நாட்டில் தாமரை மலராது.. ஆனா கடல்ல தாமரை மலரும்னு கடல் தாமரை மாநாடு நடத்துனாங்க" என மீனவர்கள் கைதை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த மாதம் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. மீனவர் செந்தமிழ் குண்டடிப்பட்டு யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற மீனவர்களை சிறையில் அடைத்து படகை இயக்கிய மீனவருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது சம்பவத்தை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காரைக்கால் மீனவர்கள் இன்று ஏழாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும், திமுக சார்பில் ராமேஸ்வரத்தில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும், 88 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து 10 மீன்வளக் கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தமிழக மீனவர்களை மீட்டுவர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.
திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுகவினர் முழக்கம் எழுப்பினர். மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி, "கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி வருவதற்கு முன்னர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தினார்கள்.
தமிழ்நாட்டிலே தாமரையே மலராது.. ஆனா கடலில் தாமரை மலரும்னு கடல் தாமரை போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தாமரையையும் காணவில்லை, பாஜகவையும் காணவில்லை.
ஒரு மாநிலத்தின் உரிமையை மதித்து நடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை; மக்களைப் பிரிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டபோது பிரதமர் மோடி மௌனமாக இருந்தார்; இலங்கை பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முன் வருவதில்லை" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications