கலெக்டர் நெஞ்சை பிடித்து கீழே தள்ளி விட்டது இவர் தானாம்.. நவாஸ் கனி எம்.பியின் உதவியாளர் கைது! பரபர!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனின் நெஞ்சைப் பிடித்துக் கீழே தள்ளிய எம்.பி நவாஸ் கனியின் உதவியாளர் மீது, 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் பங்கேற்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பரிசளிப்பு விழா நவாஸ் கனி எம்.பி வருவதற்கு முன்பு துவங்கியதாக கூறப்படுகிறது. அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த நவாஸ் கனி எம்.பி, இதுபற்றி அவர் ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். முன்கூட்டியே ஆரம்பிப்பது என்றால் என்னிடம் சொல்ல வேண்டியதுதானே எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன பதிலால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து நவாஸ் கனி எம்பி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை சமாதானம் செய்ய முயன்றார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். அப்போது ஒருவர் மாவட்ட ஆட்சியரின் நெஞ்சை பிடித்து தள்ளிவிட்டதில், அவர் நிலைதடுமாறி விழுந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு வாக்குவாதத்தை முடித்து வைத்தனர். அமைச்சர், எம்.பி மோதிக்கொண்டதில் மாவட்ட ஆட்சியர் கீழே தள்ளிவிடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சியினர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் மற்றும் எம்.பி இருவரையும் சமாதானம் செய்ய முயன்றபோது தன்னை தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட எம்.பி நவாஸ்கனியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனின் நெஞ்சைப் பிடித்துக் கீழே தள்ளிய எம்.பி நவாஸ் கனியின் உதவியாளரான சாயல்குடி பகுதியைச் சேர்ந்த விஜயராமு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிள்ளது.
கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தன்னிச்சையாகத் தாக்கிக் காயப்படுத்துதல், அரசு ஊழியரின் பணியைத் தடுத்து வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விஜயராமு மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications