ஊமையாக கூட வாழு.. உதயகுமார் போல வாழாதே! ‘நேரடி அட்டாக்’ - வரிந்துகட்டி இறங்கிய ஓபிஎஸ் டீம்!
ராமநாதபுரம் : 'ஊமையாக கூட வாழு! உதயகுமார் போல வாழாதே!!" என்ற வாசகத்தோடு ராமநாதபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தீவிரமடைந்து, இருதரப்பு ஆதரவாளர்களும் தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக தென் மாவட்டங்கள் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

இருதரப்பு மோதல்
அதிமுகவில் இரட்டைத் தலைமையாகச் செயல்பட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் தற்போது தனித்தனியே பிரிந்து கிடக்கின்றனர். ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார். கடந்த சில நாட்களாக களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர், எதிர் தரப்பினரை மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.

குமுறும் தொண்டர்கள்
ஓ.பி.எஸ்- ஈபிஎஸ் மோதலில், எடப்பாடி ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். உட்கட்சி பிரமுகர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மோதலில் கட்சியை அழித்து விடாதீர்கள் என தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

பச்சோந்தி ஆர்.பி உதயகுமார்,
எடப்பாடி ஆதரவாளராக உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துப் பேசிவரும் நிலையில், சமீபத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், கடந்த காலங்களில் ஆர்.பி.உதயகுமார் சைக்கிளில் சென்றார். இன்று 5 ஆயிரம் கோடிக்கு அவர் அதிபதி. ஜெயலலிதாவிடம் ஆர்.பி.உதயகுமாரை அறிமுகப்படுத்தி கட்சியில் வளர்த்துவிட்டது ஓபிஎஸ் தான். ஆனால் இன்று அவர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து பேசுகிறார். ஆர்.பி.உதயகுமாரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்" எனக் கூறினார்.

நான் உண்மைகளை சொன்னால்
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரிந்துகட்டி இறங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இதுபோன்ற பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் என்னிடத்தில் ஆகாது. நான் கட்சி மற்றும் தொண்டர்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறேன். என்னை மிரட்டிப் பார்க்கும் ஓபிஎஸ் குறித்து உண்மைகளை வெளியிட்டால், ஓபிஎஸ் வெளியில் தலை காட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

வலுக்கும் மோதல்
இதனால் ஆர்.பி.உதயகுமாருக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் எதிர்தரப்பான ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். இதனால் தேவர் சமுதாயத்தில் பிறந்து தேவர் சமுதாயத்திற்கே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துரோகம் செய்துவிட்டதாக சமீபத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் போஸ்டர்
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 'ஊமையாக கூட வாழு! உதயகுமார் போல வாழாதே!!" என்ற வாசகத்தோடு ஆர்.பி.உதயகுமார் மாஸ்க் அணிந்த புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அரசியல் பயணம் லீ என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications