ராமநாதபுரத்தில் ஒரு மீன் 1.33 லட்சம்.. மன்னார் வளைகுடாவில் மீனவர் வலையில் விழுந்த ஜாக்பாட்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்க சென்றனர். அங்கு ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக விலை உயர்ந்த ஆண் கூறல் மீன் ஒன்று சிக்கியிருந்தது. இந்த மீனை ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 400-க்கு வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார். இந்த அளவிற்கு விலை போக என்ன காரணம்.. அப்படி என்ன கூறல் மீன் ஸ்பெசல் என்பதை பார்ப்போம்.
ராமநாதபுரம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, தடியன், பாறை, கட்டா உள்ளிட்ட பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக விலை உயர்ந்த ஆண் கூறல் மீன் ஒன்று சிக்கியிருந்தது. இந்த மீனை ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 400-க்கு வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்கள்.
இது குறித்து மீனவர் ராஜா என்பவர் கூறும் போது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலவகை மீன்கள் கிடைக்கிறது. எனினும் கூறல் மீன்கள் கிடைப்பது மிக அரிதாகும். இந்த மீனின் வயிற்றுப் பகுதியில் உள்ள நெட்டி, மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும், விலை உயர்ந்த இருந்த மதுபானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிடித்து வரப்படும் கூறல் மீன் வியாபாரிகள் மூலம் கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். மீனவர்கள் பிடித்து வந்த விலை உயர்ந்த கூறல் மீனை துறை ஏராளமான மீனவர்களும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றார்கள்.
மீனவர் ராஜா கூறியது போலவே கூறல் மீன் கடல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களில் காணப்படும் ஒரு வகை மீன் ஆகும். இவை நீந்தும்போது ஒருவித முனகல் சத்தத்தை எழுப்புவதால் ஆங்கிலத்தில் இதனை 'Croaker' என்று அழைக்கிறார்கள். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை இம்மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன் உணவுக்காக மட்டுமல்லாமல், அதன் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்திற்காகவே பெரும் விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கூறல் மீனின் வயிற்றில் இருக்கும் 'காற்றுப்பை' மருத்துவக் குணங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடு கொண்டது. இது காய்ந்த நிலையில் டன் கணக்கில் சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மீனின் காற்றுப்பையில் இருந்து பெறப்படும் இயற்கை புரதத்தைக் கொண்டு, அறுவை சிகிச்சையின் போது மனித உடலில் தையல் போடப் பயன்படும் 'Abosrbable Sutures' (தானாகவே கரையும் நூல்கள்) தயாரிக்கப்படுகின்றன.
ஒயின் மற்றும் பீர் போன்ற பானங்களைத் தெளிவுபடுத்த (Clarifying agent) கூறல் மீனின் காற்றுப்பை பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ உலர்ந்த காற்றுப்பை சர்வதேசச் சந்தையில் பல ஆயிரம் ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை தரம் வாரியாக விற்கப்படுகிறது.
கூறல் மீன் மருத்துவ குணம் மட்டுமல்ல ருசியான உணவும் கூட, இதில் இதில் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்குமாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் தேவையான முக்கியப் புரதங்கள் கூறல் மீனில் உள்ளன. அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உடல் வலிமை பெறவும், திசுக்கள் விரைவில் குணமடையவும் கூறல் மீன் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. கூறல் மீனில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஏற்றது.
கூறல் மீனின் சதைப்பகுதி வெள்ளை நிறத்தில் மென்மையாகவும், முட்கள் குறைவாகவும் இருக்கும். அதனால் குழம்பு மற்றும் வறுவலுக்கு மிகவும் உகந்தது என்கிறார்கள் மீனவர்கள். கூறல் மீன்களிலேயே 'தாமரைக்கயல்' அல்லது 'கோல்' (Ghol Fish) வகை மீன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஒரு பெரிய கோல் மீன் பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.இதிலிருந்து தயாரிக்கப்படும் கருவாடு மிகவும் சுவையானது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக்கூடியது ஆகும்.












Click it and Unblock the Notifications