நீங்கள் அதிமுக இல்லை! சசிகலா கடிதத்தை நிராகரித்த கலெக்டர்! தேவர் குரு பூஜை பரபரப்பு!
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் தனக்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் சசிகலா கொடுத்த கடிதத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டார்.
அதிமுக சார்பில் ஏற்கனவே கடிதம் கிடைக்கப்பெற்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் சசிகலாவுக்கு தனியாக நேரம் ஒதுக்கித் தர மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
இதனால் நாளை அதாவது வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பசும்பொன் செல்லும் சசிகலா, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் ஆளாக மரியாதை செலுத்தவுள்ளார்.
குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நாளை மறுதினம் (அக்.30-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது அரசியல் கட்சித் தலைவர்களின் வழக்கமாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரம் ஒதுக்கித்தரப்படும். அந்த நேரத்திற்குள் அங்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட வேண்டும்.
நிராகரிப்பு
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு நேரம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தனக்கு சனிக்கிழமை நேரம் ஒதுக்கித் தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சசிகலா தனியாக கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
சாலை மார்க்கம்
இந்த தகவல் சசிகலாவுக்கு கிடைத்ததும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், அதனால் என்ன வெள்ளிக்கிழமை காலையே தேவர் ஐயாவுக்கு மரியாதை செலுத்திவிடுவோம் என பயணத்திட்டத்தை மாற்றியமைக்கச் சொல்லியுள்ளார். அதன்பேரில், தஞ்சாவூரில் இருந்து இன்று பிற்பகல் புறப்படும் அவர் சாலை மார்க்கமாகவே மதுரைக்கு சென்று இரவு தங்குகிறார். வழி நெடுகிலும் தனது ஆதரவாளர்களை நின்று சந்திக்கவும் முடிவெடுத்துள்ளார்.
முதல் மரியாதை
நாளை காலை 7.30 மணிக்கு மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சசிகலா அதன்பின்னர் காலை 8 மணிக்கு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் தனது ஆதரவாளர்கள் படைசூழ பசும்பொன் நோக்கி புறப்படும் அவர் அங்கு காலை 10.30 மணிக்கு முதல் ஆளாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் மரியாதை செலுத்துகிறார்.