ஒரே ஃபோன்,பல வாய்ஸ்.. இளைஞரிடம் நூதனமாக பணம் பறித்த கோவை ஆசாமி.. என்ன செய்தார் தெரியுமா? பரபர தகவல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பல குரலில் பேசி நூதனமாக மிரட்டி பணம் பறித்த கோவையைச் சேர்ந்தவரை, நுண் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தர பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தினேஷ். 21 வயதாகும் இவர் அங்குக் கூலி வேலை செய்து வருகிறார்.
தினேஷுடன் கோவை காமராஜர் நகரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே பேஸ்புக் மூலம் பல ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார்,
பேஸ்புக் நண்பர்கள்
பல ஆண்டுகளாகவே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஷ்டத்தில் இருப்பதாகக் கூறி தினேஷிடம் பணம் கேட்டுப் பெற்றுள்ளார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து, மீண்டும் அவர் தினேஷுடம் பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்த தினேஷ், ஏற்கனவே கொடுத்த பணத்தை அய்யப்பனிடம் கேட்டுள்ளார். இருப்பினும், பணம் கொடுக்க மறுத்த அய்யப்பன், உடனடியாக தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
தற்கொலை
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன் முகுந்தன் என்பவர் தினேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, "அய்யப்பன் கடன் வாங்கியவர்கள் பெயரை எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார்" என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக தினேஷின் பெயரை போலீசாரிடம் கூறாமல் இருக்கப் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு அச்சமடைந்த தினேஷ், பணத்தை அனுப்பியுள்ளார்.
போலீஸ் அதிகாரி
அத்துடன் தொடர்ந்து தினேஷுடம் பணம் கேட்டு முகுந்தன் மிரட்டியுள்ளார். அப்போது தினேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சில நாட்கள் கழித்து தினேசுக்கு வேறொரு எண்ணில் இருந்து கால் வந்துள்ளது. அப்போது தன்னை போலீசஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், முகுந்தன் மகள் சிகிச்சைக்குப் பணம் கேட்டுத் தராததால் அவரது குழந்தை இறந்துவிட்டதாகவும் இதனால் நஷ்ட ஈடு தரவேண்டும் என மிரட்டியுள்ளார்,
ரூ 3 லட்சம் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நுண்குற்றப்பிரிவு போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தினேஷிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கோவை சேர்ந்த ஒரு நபரைப் பல பெயர்களை வைத்துக் கொண்டு தினேஷை மிரட்டியது தெரியவந்தது. அதையடுத்து, தினேஷ் அளித்த வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் நுண் குற்றப்பிரிவு போலீஸார், அய்யப்பனை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தினேஷை பல ஆண்டுகளாக மிரட்டி ரூ.3 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.