மீண்டும் மீண்டும் வேலையைக் காட்டிய இலங்கை! தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு! 8 பேர் கைது!
ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கற்களை வீசி தாக்கி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த சம்பவம், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வரும் இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் விலை மதிப்புமிக்க மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த அராஜக சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

நாகை மீனவர்கள் கைது
அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரை நகர் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இலங்கை கடற்படை அராஜகம்
இதனிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்துப் பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக மீனவர்களை எச்சரித்தனர். இதனால், கைது நடவடிக்கைக்கு பயந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர்.

மீனவர்கள் மீது தாக்குதல்
இதனையடுத்து, இன்று காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியடித்தனர். மேலும், விசைப்படகில் இருந்த மீன்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசி யெறிந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை
இதனால் வேறு வழியின்றி கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள், ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். நடுக்கடலில் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல், இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுட்டதோடு, மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியதால், மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் அதிர்ச்சி
நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, மீன்பிடிக்க விடாமல் விரட்டிய சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications