இலங்கையில் 3 மீனவருக்கு தண்டனை-கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு- நிர்மலா சீதாராமன் மீது கடும் கோபம்!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டை சேர்ந்த 3 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை விதித்திருப்பது ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி 2 விசைப்படகுகளில் மொத்தம் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டதாக கூறி கைது செய்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 23 மீனவர்களும் சனிக்கிழமையன்று ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மொத்தம் 23 மீனவர்களில் 2 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஊர்க்காவற்றுறை நீதிமன்றம். அத்துடன் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை விதித்தது நீதிமன்றம். எஞ்சிய 20 மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். இலங்கை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலைக்காக மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்த போது மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு தீர்வை நிர்மலா சீதாராமன் பெற்றுத் தரவில்லை. தற்போது மீனவர்களுக்கு தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம் என குமுறினர்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுடன் நாளை மறுநாள் நடைபயணமாகவே சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாக்காளர் அடையாள அட்டை, மீனவர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கப் போகிறோம் எனவும் மீனவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இதனிடையே கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை புறக்கணிக்க உள்ளோம்; கச்சத்தீவுக்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் யாரும் செல்லமாட்டோம்; கச்சத்தீவுக்கு ஒரு விசைப்படகும் செல்லாது எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருக்கின்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications