ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை செய்த சசிகலா - அதிமுக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுதல்
ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் அதிகாலையில் ஸ்படிக லிங்க பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
ராமேஸ்வரம்: அரசியலை விட்டு விலகி விட்டதாக கூறி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். அதிகாலையில் ஸ்படிக லிங்க பூஜை செய்து கட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுதல் வைத்துள்ளார் சசிகலா.
Recommended Video

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். காலச்சூழல் அவருக்க சரியாக இல்லாமல் போகவே ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை விட்டார்.
திடீரென்று குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட சசிகலா திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க நட்சத்திர லிங்கத்திற்கு யாகம் செய்து வழிபட்டார்.

ஆன்மீக சுற்றுலா
தஞ்சாவூர் மாவட்டத்தில் ராமர் வந்து வழிபட்டதாக கூறப்படும் 108 சிவ ஆலயங்கள் அமைந்துள்ள பாபநாசம் சிவ ஆலயத்தில் வழிபட்டார் சசிகலா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கும் சென்று அபிஷேகம் செய்து வழிபட்ட சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு போயஸ்கார்டனில் உள்ள விநாயகரையும் சிவ ஆலயத்தையும் வழிபட்டார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்றும் வழிபட்டார்.

ராமேஸ்வரத்தில் சசிகலா
ராமேஸ்வரம் ராமநாதாசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று ராமநாதபுரம் சென்றார். ராமேஸ்வரம் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு குருத்தோலை வழங்கி வரவேற்றனர். இதனையடுத்து விடுதியில் சற்று நேரம் ஓய்வெடுத்தார் சசிகலா.

பங்குனி உத்திர நாளில் தரிசனம்
விடுதியில் தங்கிய அவர் இரவு 7 மணியளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சசிகலா இரவு 8 மணியளவில் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அதிகாலையில் ஸ்படிக லிங்க பூஜை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை ஸ்படிக லிங்க பூஜை செய்து வழிபட்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சசிகலா கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிடுவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இணைவாரா சசிகலா
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சசிகலா அதிமுகவின் வெற்றிக்காக கோவில் கோவிலாக சென்று வருவார். அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக கூறினாலும் சசிகலாவிற்கு அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களாகவே வந்து தன்னை கட்சியில் இணைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. இதற்காகவே கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து வருகிறார் சசிகலா. வேண்டுதல் நிறைவேறுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications