ராமநாதபுரம் அரசு பள்ளியில் “ஹிஜாப்” தடை.. ஹெச்.எம் மீது நடவடிக்கை எடுக்க தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை
ராமநாதபுரம்: அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவிக்கும் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் ஹிஜாப் பிரச்சனை வெடித்துள்ளது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிய தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதிதாக பள்ளியில் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்று இருக்கிறார்.

ஹிஜாப் அணிய எதிர்ப்பு
அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அவரது தாயிடம் கூறி இருக்கிறார். உடனே மாணவியின் தாய் தலைமை ஆசிரியரை சந்தித்து கர்நாடகா சம்பவத்தை சொல்லி விளக்கம் கேட்டு உள்ளார்.

தலைமை ஆசிரியை
அதற்கு அந்த தலைமை ஆசிரியை, "தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதிப்பார்கள். இது அரசுப் பள்ளி. இந்த பிரச்சனைக்கு பிறகு ஹிஜாப் அணிய சொல்லி எந்த உத்தரவும் வரவே இல்லை. இது நான் கொண்டு வந்த பழக்கம் இல்லை. எனக்கு முன்பே இதுதான் நடைமுறை. என்னால் இதை மாற்ற முடியாது." என்றார்.

தாய் கேள்வி
"தமிழ்நாடு அரசு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதை நிரூபித்தால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிப்பீர்களா?" என மாணவியின் தாய் தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு அவர், "நான் அட்மிஷன் போடும்போதே இதை சொல்லி யோசிக்க சொன்னேன். அட்மிஷன் போட்ட பிறகு இதை செய்ய முடியாது." என்றார்.

டிஎன்டிஜே கோரிக்கை
பலரும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு. தமிழ்நாடு அரசே உடனடியாக நடவடிக்கை எடு." என்று வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications