ராமநாதபுரத்தில் சிக்கல்.. மதுரை எய்ம்ஸ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமா? இயக்குனர் விளக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரியில்லை என போராட்டம் நடத்திய மாணவர்களை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படுகிறதா என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அனுமந்தராவ் பதில் அளித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு தடுப்புசுவர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான பாடக்கல்லூரிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடந்து வருகிறது.. ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்களை போலவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களும், ராமநாதபுரம் பொது அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிப்பது, பயிற்சி பெறுவது என பல்வேறு பாடங்களை கற்று வருகிறார்கள்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆண்டுக்கு 50 பேர் வீதம் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்காக மத்திய அரசு நிறுவனமான மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தனி பேராசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டும் வருகிறது.
இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் சரியில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தமிழில் பேசுவதால் மொழி புரியாமல் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பெரும்பாலும் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால், இங்குள்ள சூழலை புரிந்து கொள்ளவும், கற்கவும் சிரமத்தை சந்திப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இயக்குனர் அனுமந்தராவ் ராமநாதபுரம் வந்தார்.
அப்போது மாணவர்கள் அவரிடம் கூறும் போது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தங்களுக்கு எய்ம்ஸ் தரத்திற்கு ஏற்ப உரிய வசதிகளுடன் இங்கு கல்வி கற்பிக்கப்படுவதில்லை. முறையான ஆய்வக வசதி இல்லை. எய்ம்ஸ் மாணவர்களுக்கு 4 பேருக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்படுகிறது. ஆய்வகங்கள் முறையான நேரங்களுக்கு தேவையான அளவு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நூலகங்கள் மாலை 6.30 மணிக்கே மூடப்படுகிறது.
மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் முறையான அனுமதி தரப்படுவதில்லை. வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் எங்களுக்கு பெரும்பாலும் அனுமதி தருவது இல்லை. எனவே எங்களை ஆந்திராவில் உள்ள மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அல்லது நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்து மீதமுள்ள கல்வி காலத்தை முழுமையாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்..
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இயக்குனர் அனுமந்தராவ் கூறும் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் அடிப்படை வசதி கோரிக்கை படிப்படியாக சரி செய்யப்படும். மங்களகிரி மற்றும் நாக்பூர் மருத்துவக் கல்லூரி இயக்குனர்களுடன் பேசி அங்கு மீதி கல்வியை தொடர வாய்ப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.. அறுவை சிகிச்சை அரங்குகளில் அனுமதிப்பது குறித்தும் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஈடுபடுத்துவது குறித்தும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுதி அறையில் இட நெருக்கடி தொடர்பாக தனியார் கட்டிடங்களை வாடகைக்கு பிடித்து போதிய இடவசதி செய்துதர நடவடிக்கை எடுக்க போகிறோம் என்றார்.
இதனிடையே டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் ராமநாதபுரம் வரவுள்ளதாம். இந்த குழுவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications