"தூங்கும் இளவரசர்.." சவுதி இளவரசர் அல்-வலீத்தை ஏன் அப்படி அழைக்கிறார்கள் தெரியுமா! வினோதம்
ரியாத்: எப்போதும் அரச குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒரு பிரமிப்பு இருந்து கொண்டே இருக்கும். பிரிட்டன், சவுதி என எல்லா நாடுகளின் அரச குடும்பங்கள் மீதும் மக்களுக்கு ஒரு வியப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளவரசரை மக்கள் தூங்கும் இளவரசர் எனக் குறிப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.!
இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஜனநாயகம், அதாவது தேர்தல் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. உலக நாடுகள் சமத்துவத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும், சில நாடுகளில் இன்னும் மன்னராட்சியே இருக்கிறது. அந்த அரச குடும்பங்களின் அசாதாரண வாழ்க்கை முறை மக்களைப் பிரமிக்க வைக்கிறது.

அரச குடும்பம்
பிரிட்டனில் ஆட்சி செய்யாத இங்கிலாந்து அரச குடும்பமாக இருந்தாலும் சரி, சவுதி அரேபியாவில் ஆட்சி செய்யும் அரச குடும்பமாக இருந்தாலும் சரி, அவர்கள் இன்றும் மக்களின் கவனத்தைப் பெற்றே வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை ஆடம்பரம் நிறைந்ததாகவே இருக்கிறது. இருப்பினும், அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே அரண்மனையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சில அரச குடும்ப உறுப்பினர்கள் கற்பனை செய்ய முடியாத துயரத்திலும் உள்ளன. இதுபோல துயரத்தில் இருக்கும் அரச குடும்பத்தினரில் ஒருவர்தான் சவுதியின் "தூங்கும் இளவரசர்" அல்-வலீத். அவரை பற்றி நாம் பார்க்கலாம்.
தூங்கும் இளவரசர்
இவரது முழுப் பெயர் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தான் தனது 36வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இருப்பினும், காலம் உருண்டு ஓடுவது அவருக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் கோமாவில் இருக்கிறார். அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக..! இதன் காரணமாகவே அவரை 'தூங்கும் இளவரசர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
கடந்த 2005ஆம் ஆண்டு ராணுவக் கல்லூரியில் படித்து வந்தபோது எதிர்பாராதவிதமாக இவர் சாலை விபத்தில் சிக்கினார். அப்போது கோமாவுக்கு சென்ற இவர், அதன் பிறகு அதிலிருந்து மீளவே இல்லை. இப்போது அவர் சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரில் பராமரிக்கப்பட்டு வருகிறார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறார். அவருக்கு உணவுக் குழாய் மூலமே உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒப்புக்கொள்ளாத தந்தை
கடந்த 2019ல் அவரது உடலில் லேசான அசைவுகள் தென்பட்டன. அப்போது அவர் விரலைத் தூக்குவது அல்லது தலையை லேசாக அசைப்பது போன்ற சைகைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதன் பிறகு முழுமையாக அவருக்கு நினைவு திரும்பவில்லை. இருப்பினும், அவர் என்றாவது சுயநினைவு பெறுவார் என்ற நம்பிக்கையுடன் அவரது குடும்பத்தினர் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கிறார்கள்.
அவர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் மருத்துவர்கள் வென்டிலேட்டரை எடுத்துவிட அரச குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடவுள் அவன் உயிரை எடுக்க விரும்பியிருந்தால்.. அது விபத்திலேயே நடந்திருக்கும் எனச் சொல்லி வென்டிலேட்டர் உதவியை எடுக்கத் தந்தை காலித் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
சவுதி அரச குடும்பம்
இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், தற்போதைய மன்னரின் நேரடி மகன் இல்லை. அதாவது இளவரசர் அல்-வலீத்தின் தாத்தா இளவரசர் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத் என்பவர் சவுதி நிறுவனரும் முதல் மன்னருமான அப்துல்அஜிஸ் அல் சவூதின் பல மகன்களில் ஒருவர். அதன்படி பார்த்தால் இளவரசர் அல்-வலீத் மன்னர் அப்துல்அஜிஸின் கொள்ளுப் பேரன். மறுபுறம் சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், சவுதி முதல் மன்னர் அப்துல்அஜிஸின் மகனும் ஆவார், அதாவது அவர் தூங்கும் இளவரசர் அல்-வலீத்தின் மாமா ஆவர்.












Click it and Unblock the Notifications