சேலம் ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரே நாளில் குவிந்த 3 காதல் ஜோடிகள்.. இதில் காவலர் ஒருவரும் தஞ்சம்
சேலம்: மே 4ம் தேதியான நேற்று முகூர்த்த நாள் ஆகும்.. நேற்று முதல் வளர்பிறை முகூர்த்தம் தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் திருமணம் நடைபெற்று வருகிறது. சேலம் ஓமலூரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒரு காவலரே தஞ்சம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. வேலூர் அருகே குடியாத்தத்தில் ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் விக்னேஷ் - ஊத்தங்கரை கீதா ஆகியோர் கிருஷ்ணகிரியில் வேலை செய்து வந்த போது காதலித்து வந்தனர். அண்மையில் திருமணம் செய்திருந்தனர். இதேபோல் பென்னாகரம் சஞ்சய் - மேட்டூர் கலைவாணி ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்திருந்தனர்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவலர் விக்னேஷ் - ஸ்வேதா சென்னை அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண நிலையத்தில் காதல் திருமணம் செய்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மூன்று காதல் ஜோடிகளும், பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காதல் ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார், சமாதானம் செய்து வைத்து, காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பெரியதம்பியூர் கிராமத்தை சேர்ந்த 29 வயதாகும் அன்பரசன் என்ற இளைஞரும் சென்னையை அடுத்த திருப்போரூர் மயிலை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் சந்திரிகா (25) என்பவரும் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
அன்பரசன் மற்றும் சந்திரிகா இருவரும் சென்னையில் மருந்து மாத்திரை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் சந்திரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்கள்.

இதனால் அன்பரசனும், சந்திரிகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் குடியாத்தம் அருகே உள்ள மீனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசி இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். சித்திரையில் முகூர்த்த நாளில் ஒரே நாளில் ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்து தஞ்சம் அடைந்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications