இதுதான் ரியல் கூட்டணி! முருகன் மாநாடு அன்று.. கையில் வேலுடன் நின்ற எடப்பாடி பழனிசாமி.. என்ன நடந்தது?
சேலம்: மதுரையில் பாஜக சார்பாக முருகன் மாநாடு நடந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கையில் வேல் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர். இதனை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துருச்சு என்று பேசி இருக்கிறார்.
மதுரையில் பாஜக சார்பாக முருகன் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இருந்து பாஜக தொண்டர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் வேன்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்திருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அறுபடை முருகனின் வீடுகளை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதனால் பாஜக மதுரையில் கால் பதித்துவிட்டதாக அக்கட்சியினர் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டுமே பங்கேற்று இருந்தார்.
மதுரை மாவட்ட நிர்வாகிகளான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தால் மட்டுமே, முருகன் மாநாட்டில் பங்கேற்போம் என்று செல்லூர் ராஜூ கூறி இருந்தார். அதற்கேற்ப கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து கூறி இருந்தார்.
ஒவ்வொரு மனிதருக்கும் விரும்பிய கடவுளை வழிபட ஜனநாயகத்தில் இடமிருக்கிறது என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு அதிமுகவின் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்தார்.
இதன்பின் கட்சியில் இணைந்தவர்கள் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது வேலினை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்று வேல் கைகளுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்தார். பாஜகவின் முருகன் மாநாட்டின் தாக்கமே எடப்பாடி பழனிசாமி கைகளில் வேல் இருந்ததற்கு காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications