சேலத்தில் பரபரப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்... நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட டூ வீலர்கள்
சேலம்: சேலத்தில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கரவாகனங்கள், மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சேலம் நெத்திமேடு ஆண்டிக்கவுண்டர் காலனி பகுதியில் மர்மநபர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே 5 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவு இங்கு முதலில் நுழைந்த மர்மநபர்கள், 5 வாகனங்களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் வாகனத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வாகனத்தில் இருந்த பெட்ரோல் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் 5 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகி முழுவதும் நாசமானது.
இதனையடுத்து ஆண்டிக்கவுண்டர் காலனிக்கு அருகே உள்ள எஸ்.கே.கார்டன் பகுதியிலும் மர்மபர்கள் இரு சக்கரவாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் அவையும் முழுவதும் எரிந்து சாம்பலானது.
தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்ற இரு பகுதிகளிலும், சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. எனவே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்த அடையாளங்களை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முன்விரோதம் ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications