சேலம் பாஜக தலைவர் வீட்டில் சோதனை.. ரெய்டுக்கு சென்ற போலீசாரை தடுத்த நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
சேலம்: சேலம் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு வீட்டில் தேர்தல் பறக்கும் படை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுத்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

மறுபக்கம் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சேலம் பாஜக தலைவர் வீட்டில் சோதனை: இந்த நிலையில், சேலம் பாஜக மாநகர மாவட்ட தலைவராக இருந்து வரும் சுரேஷ்பாபு வீட்டில் கடந்த 9 ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு பணம் வழங்க வைத்திருப்பதாக ரகசிய தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
தள்ளுமுள்ளு: ஆனால் இந்த சோதனையில் எந்த ஒரு பணமும் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்திருந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட போலீசார், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு வீட்டை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
10 பேர் மீது வழக்கு பதிவு: தொடர்ந்து லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. எனினும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். எனினும் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த நிலையில் போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி கூடுதல்
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவுகளில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மாநகர மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஓ பி சி அணி மாவட்ட தலைவர் கோபிநாத் உட்பட 10 பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 16 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்வார்கள்.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். இந்த பணிகளை செய்வதற்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 தேர்தல் பறக்கும் படையினர், ஒரு கண்காணிப்பு குழுவினர், ஒரு வீடியோ டீமும் பணியில் ஈடுபடுவர். அந்த வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications