சேலம் விபத்து: லாரி நின்றிருப்பதே தெரியாமல் ஆம்னி வேன் வந்ததுதான் காரணமா? பகீர் சிசிடிவி காட்சிகள்
சேலம்: சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை அளிக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஈங்கூர், குட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பழனிசாமி. இவரது மனைவி பாப்பாத்தி. இவருடைய மகள் பிரியா. பிரியாவுக்கும் சேலம் கொண்டாலப்பட்டி காமராஜர் காலனி மேட்டுத்தெருவை சேர்ந்த சேலம் மாநகராட்சி ஓட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சஞ்சனா என்ற மகள் உள்ளார். இவர்கள் நேற்று இரவு உறவினர்களுடன் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு வேனில் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறைக்கு மகள், பேத்தியுடன் ஈரோட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சங்ககிரியை அடுத்த சின்னகவுண்டனூர் 4 ரோடு பகுதியில் சேலம் - கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சாலை ஓரமாக லாரி நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் பயங்கரமாக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனானது அப்பளம் போல் நொறுங்கிவிட்டது. இதில் கருப்பண்ணன் மகன் பழனிசாமி (52), இவரது மனைவி பாப்பாத்தி (40), பாபாத்தியின் அண்ணன் முத்தான் மகன் ஆறுமுகம் (30), இவருடைய மனைவி மஞ்சுளா (21), இவரது உறவினர் செல்வராஜ் (55), ராஜதுரையின் மகழ் சஞ்சனா (1) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
ஓட்டுநர் விக்னேஷும் (20) பழனிசாமி- பாப்பாத்தி மகளும் ராஜதுரையின் மனைவியுமான பிரியா (25) என்பவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறைய சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறை திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
அதிகாலை நேரம் என்பதால் சாலையில் நின்றிருந்த லாரி ஆம்னி வேனுக்கு தெரியாமல் போயிற்றா, அதனால் இந்த விபத்து நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது முகப்பு விளக்கையும் பின் விளக்கையும் எரிய விடுவது வழக்கம். அதை இந்த லாரி செய்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications