"விடியல் கிடைக்கும்" அழகாக பேசி ஏமாற்றிவிட்டார்கள்.. ஊழல் செய்வதே திமுகவின் சாதனை.. எடப்பாடி அட்டாக்
சேலம்: ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடந்த அதிமுக கட்சி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. திமுகவின் சாதனையே ஊழல் செய்ததுதான் சாதனை. திமுக 2ஆண்டு கால ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தது. நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? எதுவுமே கிடையாது.

முதல்வர் குடும்பம் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று பல முதல்வர்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அதிகார மையங்க்ள் அதிகரித்து விட்டது. அதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 10 சதவீத அறிவிப்புகளை தான் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
கவர்ச்சிகரமாக அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து அறிவிப்புகளையும் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு..வந்த பிறகு ஒரு பேச்சு... இரட்டை வேடம் போடுகிற கட்சி எதுவென்றால் அது திமுகதான். சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு ஊழல் அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஊழல் செய்ததாக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் தொடர்ந்து அமைச்சராக இருக்கிறார்.
அவருக்கு முதல்வர் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறார். மிக கேவலமாக இருக்கிறது. நாடே எள்ளி நகையாடுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருப்பவரை எப்படி மாண்பு மிகு அமைச்சர் என்று சொல்ல முடியும். சிறைவாசியாக இருப்பவர் எபப்டி அமைச்சராக தொடர முடியும் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இனியாவது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications