எடப்பாடியில் ஆட்டத்தை மாற்றும் அந்த 61,000 வாக்குகள்! யாருக்கு கை கொடுக்கும்? இபிஎஸ்-க்கு அதிர்ச்சி?
சேலம்: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடி தொகுதியில் இந்த முறை போட்டி சுவாரசியமாக இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு முன்பே ரேஸில் இருந்து தவெக விலகிவிட்ட நிலையில், இளைஞர்கள் வாக்கு யாருக்குச் செல்லும் என்பதே இப்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள வாக்காளர் விவரம் குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடே ஏப்ரல் 23ம் தேதி நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் கூட இல்லாத சூழலில், இப்போதே களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.. ஒரு பக்கம் ஆளும் கட்சியான திமுக தனது வழக்கமான ஸ்டைலில் தேர்தல் அறிக்கை, வாக்குறுதி மற்றும் கூட்டணியை நம்பி இறங்குகிறது.

வலிமையான கூட்டணி
மறுபுறம் அதிமுகவும் கூட வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது. திமுகவுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள அதிமுக, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறது. இதுபோக நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நடக்கிறது. இதில் மாநிலத்தின் முக்கியமான ஸ்டார் தொகுதியாக உள்ளது சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதி!
இளம் வாக்காளர்கள்
எடப்பாடி தொகுதியில் வயது ஆண்களில் 18-29 வயதானோர் 32,472 பேர், பெண்களில் 28,981 பேர் என மொத்தம் 61,453 பேர் உள்ளனர். பெரும்பாலும் 30 வயதைக் கடந்தவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கே அதிகம் வாக்களிப்பார்கள். அவர்களில் புதிய கட்சிகளுக்கு வாக்களிப்போர் உள்ளனர் என்ற போதிலும் அது குறைந்த அளவிலேயே இருக்கும். மாறாக 30 வயதிற்கு உள்ளாக இருக்கும் இந்த 61 ஆயிரம் வாக்குகளே எப்படி வேண்டும் என்றாலும் செல்லும் என்ற சூழல் இருக்கும்.
தவெக இல்லை
இந்த முறை தமிழ்நாடு முழுக்கவே இளம் வாக்காளர்களைப் பிரிக்கக்கூடிய சக்தியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கப்பட்டது. எடப்பாடி தொகுதியில் அருண் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவரது மனைவி நித்யா மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த நிலையில், அதுவும் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டது.
இதனால் தவெக எடப்பாடி தொகுதியிலேயே இல்லை.. இது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கூடுதல் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இளம் வாக்காளர்களின் கவனம் சிதறாமல் இருப்பதும், எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் செய்துள்ள உட்கட்டமைப்புப் பணிகள் மற்றும் அவரது நேரடி செல்வாக்கு ஆகியவை ஈஸியாக அவரது வெல்ல வைக்கும்.
பிளான் B-யால் சிக்கல்?
அதேநேரம் எடப்பாடி தொகுதியில் வேறு ஒரு சுயேச்சைக்கு தவெக ஆதரவு அளிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் களமிறங்கினால் இளம் வாக்காளர்களில் கணிசமான பங்கு அந்த வேட்பாளருக்குச் செல்லும். இது எடப்பாடிக்கு கொஞ்சம் குடைச்சலையே கொடுக்கும். இருப்பினும், டைம் குறைவாகவே உள்ளதால் அந்த சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது கடினம்.. அதாவது தவெக நேரடியாகப் போட்டியிட்டால் ஏற்படும் பாதிப்பை விட இது குறைவு!
மேலும், எடப்பாடி தொகுதியில் வன்னியர்களே அதிகம் உள்ள நிலையில், அவர்கள் வாக்குகள் அதிமுகவுக்கே வரும். இதனால் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடி தொகுதியில் வெல்ல வாய்ப்பு அதிகம். இந்த 60,000 வாக்குகள் எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பதை மட்டுமே மாற்றும் என்கிறார்கள்
வயது வாரியான வாக்காளர்கள்
எடப்பாடி தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையை வயது வாரியாகப் பிரித்துப் பார்த்தால், இளைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆண்கள்
- 18-29 வயது: 32,472
- 30-39 வயது: 29,242
- 40-49 வயது: 26,529
- 50-59 வயது: 23,499
- 60-69 வயது: 16,019
- 70-79 வயது: 8,240
- 80+ வயது: 2,708
பெண்கள்
- 18-29 வயது: 28,981
- 30-39 வயது: 25,981
- 40-49 வயது: 25,173
- 50-59 வயது: 24,474
- 60-69 வயது: 17,701
- 70-79 வயது: 9,552
- 80+ வயது: 3,454












Click it and Unblock the Notifications