அதிமுகவை உடைப்பதா?.. சட்டையை கிழிச்சீங்க! யார் அந்த கறுப்பு ஆடு?.. ஓபிஎஸ்ஸை விமர்சித்த எடப்பாடியார்!
சேலம்: அதிமுகவை பிளவுப்படுத்த திமுகவுக்கு சில கருப்பு ஆடு துணை போகிறது. அந்த ஆடு யார் என்பது உங்களுக்கு தெரியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறுகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திட்டங்களை தீட்டி கொடுத்து நன்மை செய்யும் கட்சி அதிமுக. எல்லாருக்கும் அதிமுகவை கண்டால் பொறாமை.
ஏனென்று கேட்டால், இந்த கட்சி எத்தனையோ முறை உடைகிறது. என்றாவது பிளவுப்படுகிறதா என பார்க்கிறார்கள். ஒன்றுமே முடியவில்லை. உயிரோட்டமுள்ள கட்சி அதிமுக, எவராலும் பிளக்க முடியாது, பிளக்க நினைத்தால் அவரே காணாமல் போய்விடுவார்.
அமித் ஷா போட்ட போடு.. எடப்பாடி முகத்தை பார்த்தீங்களா..அண்ணாமலை பதவிக்கு சிக்கல்..பற்ற வைத்த பழனிசாமி
சோதனை
அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனை வருகிற போது அந்த சோதனைகளை எல்லாம் படிக்கட்டுகளாக்கி சாதனை படைத்த வரலாறு உள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அப்போதுதான் ஜெயலலிதா பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைந்து 1991 இல் அதிமுக ஆட்சியை அமைத்தார்.
ஜெயலலிதா மறைவு
அது போல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என் தலைமையில் அமைந்த ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எத்தனையோ முயற்சிகளை செய்தார். சட்டசபையில் சட்டையை கிழித்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம்.
ஒரு மாதத்தில்
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 1 மாதத்தில் போய்விடும், 3 மாதம், 6 மாதம் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டே வந்தார். ஆனால் 4 ஆண்டுகள் இரு மாதங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி முடித்தோம். ஜெயலலிதா 234 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மக்களுடைய ஆதரவுடன் இந்த அதிமுக ஆட்சியை 2016 இல் அமைத்தார்.
யார் போராட்டம்
நான் முதல்வராக இருந்த போது யார் போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் அனுமதி கொடுத்தோம். உரிமைக்காக போராட கேக்குறாங்க, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர போராட அனுமதி கேட்கிறாங்க. ஆனால் நாம் ஒரே ஒரு போராட்டத்திற்குதான் அனுமதி கேட்டேன். அதுக்கே ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை.
மேடை போட அனுமதி
சேலத்தில் மேடை போட அனுமதி கொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் கட்சி ரீதியில் 72 மாவட்டங்கள் உள்ளன. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை மக்களிடம் சொல்ல அனுமதி கேட்டதற்கு காவல் துறை கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு ஸ்டாலின் நடுங்கி போய் உள்ளார்.
1000 போராட்டங்கள்
நான் முதல்வராக இருந்த போது 1000 போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தேன். அவர்கள் அமைதி பெறும் வகையில் மன நிறைவு பெறும் வகையிலும் சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். அதிமுகவை பொருத்தவரைக்கும் எல்லா தொண்டனும்தான் பொதுச் செயலாளர். தனிப்பட்ட நபர் கிடையாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதுதான் பொதுச் செயலாளரின் கடமை. அதைத்தான் அதிமுக இன்று செயல்வடிவம் கொடுத்து கொண்டிருக்கிறது.
பொதுக் குழு கூட்டம்
பொதுக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் எத்தனை அமைதியாக இருந்தார்கள். அவர்கள் கூடி சில முடிவுகளை எடுத்தார்கள். அது ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. எப்படியாவது கட்சி உடையாதானு பார்க்கிறார்கள். அதற்கு சில பேர் துணை போறாங்க. யாரெல்லாம் திமுகவுக்கு துணை போறாங்கன்னு தெரியும். இந்த கட்சிக்குள்ள கருப்பு ஆடு இருக்கிறது தெரியும். லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம் அதிமுகவை முடக்க பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பயந்தவர் அல்ல என்றார் எடப்பாடி பழனிசாமி.