களமே தலைகீழாகுதா? பாஜகவை எறிந்த கையோடு களத்தில் எடப்பாடி! சேலத்தில் முஸ்லிம்களிடம் திடீர் பிரசாரம்!
சேலம்: முஸ்லிம்கள் எண்ணியபடி அதிமுக நடந்து கொண்டிருக்கிறது; சிறுபான்மை மக்களை கண்ணின் இமை போல அதிமுக பாதுகாக்கும் என சேலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டும் பேசி வந்தனர்.

இந்நிலையில் பாஜக கூட்டணியை முறித்த பின்னர் முதல் முறையாக சேலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அனைவரும் எழுந்து நில்லுங்க.. அனைவருக்கும் வணக்கம். இங்க அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் வந்துருக்கீங்க.. உங்களுக்கு இனிய வணக்கங்கள்.
நீங்க நினைச்சதுதான்: நீங்க எண்ணியபடியே அண்ணா திமுக நடந்து கொண்டது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன். அதேபோல நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்கள் பகுதியிலேயே இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்ற செய்தியை நான் கேட்டு அறிந்தேன்.

இஸ்லாமியர்களிடம் பேசுங்கள்: அனைத்து இஸ்லாமிய பெருமக்களிடம் நீங்கள் நேரடியாக சென்று, அனைத்திந்திய அண்ணா திமுக எப்போதும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை உறுதியாக கொடுக்கலாம். அதுவும் நான் இந்த பகுதியைச் சேர்ந்தவன். சேலத்திலே நான் இருக்கிறேன். எப்பொழுதும் என்னை சந்திக்கலாம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு: அனைத்திந்திய அண்ணா திமுகவைப் பொறுத்தவரைக்கும் கண்ணை இமை காப்பதைப் போல சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் முதல் ஆளாக இருப்போம். பல பேர் வாக்குக்காக எதை எதையோ பேசுவார்கள். நாங்கள் அப்படி அல்ல.
அதிமுகவின் எண்ணம்: எங்களைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் நலமோடு வாழ வேண்டும். சிறப்போடு வாழ வேண்டும். அத்தனை மக்களுக்கும் அத்தனை திட்டங்களும் இல்லம் போய் சேர வேண்டும். அதுதான் எங்களுடைய தலைவர்களின் எண்ணங்கள். அதை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள்: அந்த வகையில், இன்றைக்கு தமிழகத்திலே வாழ்கிற அத்தனை மக்களுக்கும் அண்ணா திமுக பாதுகாப்பாக நிற்கும்; அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீங்கள் இதை தைரியமாக சிறுபான்மை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுங்கள். சிறுபான்மை மக்களை நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க வேண்டும். உங்களுடைய பூத்துகளில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாக்களித்த பூத்துகள் என்ற பெருமையை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். நாம் ஒற்றுமையாக செயல்பட்டு, நமக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பதிவு செய்ய பாடுபட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications