சாதாரண விவசாயிக்கு சாதி சம்மன்.. "ஹிந்து - பள்ளர்".. ஓடிவந்த தலை.. ஆதரித்த பிரவீனா.. அரண்ட சேலம் பாஜக
சேலம்: சேலம் விவசாயிகளுக்கு சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவளித்து புகார் தந்த வழக்கறிஞர் பிரவீனாவை விசாரணைக்கு உட்படுத்துமாறு அனுமதி கேட்டும் மறுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் என்ற ஊராட்சியை சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன் + கிருஷ்ணன்.. இவர்கள் பட்டியலின விவசாயிகளாவர்.. இவர்களுக்கு சொந்தமாக 6.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.இந்த நிலத்தை பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் அபகரிக்க முயன்றதாக சொல்கிறார்கள்..
இதற்காக, 2 விவசாயிகளுக்கும் தொடர்ந்து டார்ச்சர் தந்து கொண்டே வந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால், இதுதொடர்பாக போலீசிலும் புகார் தரப்பட்டு, கோர்ட்டிலும் இது தொடர்பான கேஸ் நடந்து வருகிறது.

வீட்டு நம்பர்: இந்நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி சகோதரர்கள் இருவருமே, சென்னைக்கு வரவேண்டும் என்று அவர்களது சாதிப் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனில், வீட்டு நம்பர் உட்பட வேறு எந்த விவரங்களும் இல்லாமல் வெறும் சாதி பெயரை மட்டுமே குறிப்பிட்டு சம்மன் வந்திருந்தது.
இதனால், பதற்றமடைந்த சகோதரர்கள் 2 பேரும், தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜரானார்கள்.
வங்கி கணக்கு: சாப்பாட்டுக்கே தாங்கள் கஷ்டப்பட்டு வரும்போது, மத்திய அரசு தரும் 6 ஆயிரம் நிதி உதவியை பெற்று வருவதாகவும், ரேஷனில்தான் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வருவதாகவும், தங்களது வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருக்கும்போது, தங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டி சம்மன் வந்துள்ளதாகவும் விவசாயிகள் கலங்கி சொல்கிறார்கள்.
தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டி போலீசில் புகார் தந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
பணப்பரிவர்த்தனை: இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ள சம்பவத்திற்கு. அரசியல் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போராட்டம்: எதற்காக ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது என்பது குறித்தும் தேசிய அமலாக்கத்துறை இயக்குனரகம் விளக்கம் அளிக்க வேண்டும். ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற விஷயங்களில் அமலாக்கத் துறை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்" என்று கிருஷ்ணசாமி அலர்ட் செய்துள்ளார்.
இதனிடையே, நுங்கம்பாக்கம் போலீசார் 2 விவசாயிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த பெண் வழக்கறிஞரான பிரவினாவிற்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து, அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, வழக்கறிஞர் பிரவினா ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை சொல்லி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் அளித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நடவடிக்கை: அதைதொடர்ந்து ஓரிரு நாளில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சம்மன் என்னவென்றுகூட அறியாமல், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரான பிரவீனாவின் உதவியை விவசாயிகள் அணுகியிருக்கிறார்கள்.
அப்போதுதான், சாதி பெயர் பதிவிட்டதுடன், பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு வழங்கும் ரூபாய் 6 ஆயிரத்தை நம்பி வசித்து வரும் விவசாயிகளுக்கு எப்படி சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டது என்று வழக்கறிஞர் பிரவினா அதிர்ச்சியடைந்தார்.
அனுமதி இல்லை: அமலாக்கத்துறை அலுவலகத்தில், விவசாயிகளை விசாரணைக்கு உட்படுத்தியபோதுகூட, உடன் யாரும் வரக்கூடாது என்று கூறி, வழக்கறிஞர் பிரவினாவை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லையாம். படிக்க தெரியாத விவசாயிகளின் வழக்கறிஞராகவே தான் வந்திருக்கிறேன், விசாரணைக்கு தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரவினா பல முறை வாதாடியும் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.












Click it and Unblock the Notifications