எங்க வந்து யார்கிட்ட? கொடிகளை பிடுங்கி வீசி.. சேலத்தில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் - எடப்பாடி ஆதரவாளர்கள்!
சேலம் : சேலம் மாவட்டத்தில், ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய சுவரொட்டிகள், பேனர்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிழித்தனர். அதிமுக கொடிகளை பயன்படுத்தக்கூடாது என ஈபிஎஸ் அணியினர் அகற்றியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி மோதல் வெடித்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நெருங்கிவிட்டது. தற்போது அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது. மேலும் உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான முடிவுகளை அளித்துள்ளதால் சட்ட ரீதியாகவும் பலம் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் அணி கூட்டம் : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் இன்று மாலை ஓபிஎஸ் அணியினரின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணிவின் முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், புகழேந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடி - பேனர் : இதற்காக மண்டபம் முன்பு பேனர்கள் வைத்ததோடு, அதிமுக கொடிகளை நடும் பணியில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எடப்பாடி அணியினர் அதிமுக கொடி நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடியை பயன்படுத்தக் கூடாது, நாங்கள்தான் உண்மையான அதிமுக என நீதிமன்றம் முறையான உத்தரவை பிறப்பித்துள்ளது, எனவே கொடியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் நாங்கள் அதிமுக கொடியைத்தான் பயன்படுத்துவோம், உங்களால் முடிந்ததைப் பாருங்கள் எனக் கூறியதால், எடப்பாடி அணியினர் கொடிகளை அகற்றினர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியது.
கடும் மோதல்.. கைகலப்பு : அப்போது அங்கு காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேசி சண்டையை முடித்து வைத்தனர். தொடர்ந்து, கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாநகர காவல் உதவி ஆணையர் வெங்கடேசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி அதிமுக கொடியை பயன்படுத்த தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் மற்றவர்கள் யாரும் இதனை பயன்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications