மனைவி கழுத்தறுத்து கொலை.. பக்கத்து வீட்டுக்கும் தீ வைத்த கணவர்.. சேலத்தில் பரபரப்பு.. என்ன நடந்தது?
சேலம்: சேலம் அருகே கோட்டகவுண்டம்பட்டியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே தெருவில் உள்ள வீட்டிற்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு, கணவர் தலைமறைவாகி இருக்கிறார்.
60 வயதான மனைவி கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகம் கொண்டு ஆத்திரமடைந்த கணவர், விரக்தியடைந்து கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கு, அதே தெருவில் வசிக்கும் பெண் ஒருவரே காரணம் என்று கருதிய கணவர், அவரின் வீட்டிற்கும் தீ வைத்திருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாகி இருக்கிறது.

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65). இவரின் மனைவி இந்திரா(60). விவசாயியான பாலகிருஷ்ணனுக்கும் அவரின் மனைவி இந்திராவுக்கும் இடையே தொடர்ச்சியாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்திராவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக பாலகிருஷ்ணன் சந்தேகித்து வந்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக மனைவி இந்திராவை பலமுறை பாலகிருஷ்ணன் கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், மனைவி தன் சொல்படி கேட்காததால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டிலிருந்த மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும் அதே தெருவில் உள்ள மூன்றாவது வீட்டில் வசித்து வரும் கலா என்பவர்தான் தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணம் என கருதிய பாலகிருஷ்ணன், அவரின் வீட்டிற்கும் சென்றுள்ளார். ஆனால் அங்கு யாரும் கதவை திறக்காததால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார்.
பெட்ரோல் ஊற்றியதால் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்திராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications